குடும்பச் சண்டை வலுத்தது: லாலுவின் 3 மகள்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சாரியா குடும்பச் சண்டையில் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவரது மற்ற 3 சகோதரிகளும் பாட்னாவில் உள்ள லாலுவின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி, குடும்பச் சண்டையாக வலுத்துள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். இரண்டு மகன்களும், 7 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் மிசா பாரதி, 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா, மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசியலில் உள்ளனர்.
திடீரென மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை லாலு பிரசாத் கட்சியிலிருந்து நீக்கினார்,லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தந்தைக்கு சிறுநீரகம்
தந்த மகள் ரோகிணி
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட லாலுவுக்கு கடந்த 2022-ம் ஆண்டில் ரோகிணி சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டில் அவர் பீகார் அரசியலில் கால் பதித்தார். அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார். இதன்பிறகு அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி அவர் மீண்டும் பீகாருக்கு திரும்பி வந்தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் லாலுவின் சமரசத்தால் ரோகிணி, பீகார் தேர்தலில் அதிதீவிரமாக பணியாற்றினார். இந்த சூழலில் பீகார் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி 143 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி தொடர்பாக ரோகிணி மீது தேஜஸ்வி குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினருக்குள் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ரோகிணி நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:– நேற்று (சனிக்கிழமை) ஒரு மகள், சகோதரி, மனைவி, ஒரு தாய் அவமதிக்கப்பட்டாள். மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்கவும் முயற்சி செய்தனர். ஆனால் நான் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. வேறு வழியின்றி நேற்று (சனிக்கிழமை) கண்ணீர்விட்டு நின்ற பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டு பிரிந்து வந்தேன். எனது தாய் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். நான் ஆதரவற்று நிற்கிறேன்’’ என அப்பதிவில் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய ரோஹிணி, தன்னுடைய சிறுநீரகத்தை தந்தைக்கு தானமளித்ததால், தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சகோதரிகள் ராகிணி, சாந்தா, ராஜலஷ்மி ஆகியோரும் பாட்னாவில் உள்ள பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகவும் ரோகிணி குறிப்பிட்டுள்ளார்.
சகோதரன் தேஜ் பிரதாப்
வேதனை...
பீகாரில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரோஹிணி வீட்டை விட்டு வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூறியிருக்கும் தேஜ் பிரதாப், நேற்று நடந்த சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. என்னுடைய சகோதரிக்கு நடந்திருக்கும் அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.என்னை அவமானப்படுத்தினால் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால், அவரை அவமானப்படுத்தினால் தாங்க முடியாது. அவருக்கு நடந்த அவமரியாதை மிகவும் பயங்கரமானது என்றும் அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.