ஒரு சிலுவை நாயகனின் வழி!
கொஞ்சம் விட்டுக்கொடுத்துத் தான் பாருங்களேன்...
அகிலம் உங்களைக் கொண்டாடும்!
அந்தச் சிலுவையைச் சுமந்துதான் பாருங்களேன்...
பாரங்கள் எல்லாம் தவமாய் மாறும்!
அன்பை மட்டும் விதைத்துப் பாருங்கள் - அது
அகிம்சை வழியில் உங்களை நடத்தும்!
தீங்கு இழைத்தவரை மன்னித்துப் பாருங்கள்,
துரோகம் செய்தவரை அரவணைத்துப் பாருங்கள்!
இதயம் திறந்து அன்பைப் பகிர்ந்தால் - அங்கு
இறைவனின் அரசாங்கம் மலரக் காண்பீர்கள்!
சண்டையிட்டுப் பிரிந்த உறவுகளே...
மீண்டும் இணைய ஒரு வழி தேடுங்கள்!
மௌனம் காக்கும் நண்பனின் எண்ணை - இன்று
கைபேசியில் தேடித் தொடுங்கள்!
ஒதுக்கி வைத்த உறவுகளை - மீண்டும்
ஒருமுறை நினைத்துப் பாருங்கள்!
எதிரி என்று எவருமில்லை - அந்தப்
பட்டியலை அன்பால் கிழித்துப் போடுங்கள்!
வையகத்தில் நண்பரைத் தவிர எவருமில்லை,
எல்லோரும் நம் இரத்த உறவுகளே!
வாய் நிறையப் புன்னகை ஏந்தி - வாரீர்,
வந்தவரை எல்லாம் மகிழ்ந்து வரவேற்போம்!
எதிரே வரும் எவரோடும் - நீங்கள்
புன்னகையால் கைகோர்த்துக் கொள்ளுங்கள்;
உங்களைச் சோதிக்க வந்த - அந்த
இறைவனாகக் கூட அவர் இருக்கலாம்!
"உன்னைப்போல் உன் அயலானையும் நேசி!"
ஆண்டவர் சொன்ன மகா மந்திரம் இதுவே!
அவர் அவதரித்த நன்நாளில் - இதை
உணரத் துணிந்தாலே உயர்வுகள் தொடங்கும்!
வாருங்கள் கைகோர்த்து மகிழ்வோம்!
பாலன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவோம்!
வேதனை தந்தோர்... விரக்தி அளித்தோர்...
எவருமில்லை இந்த உலகில் - இப்போது
அன்பானவர்கள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள்!
நேசிப்போம்... நேசித்துக் கொண்டே இருப்போம்!
இந்த உலகில் நேசம் ஒன்றுதான் - என்றும்
நிரந்தரமானது... நிஜமானது!
___
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?