மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
Dec 21 2025
10
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சரவணன் மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் சக்திவேல், அறங்காவலர் குழுத்தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ், கணக்கர்மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?