நியூயார்க் சிறையில் வெனிசுலா அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு
Jan 06 2026
18
கராகஸ்: வெனிசுலாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படையினர் சிறைபிடித்தனர். பின்னர், அவர்களை போர்க் கப்பலில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், அமெரிக்காவுக்குள் டன் கணக்கில் கோகைனை இறக்குமதி செய்தது மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் 61 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மதுரோ அமெரிக்காவை வம்பிழுக்கும் காட்சிகளும், மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்ய நடத்தப்பட்ட அதிரடி சோதனைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில், வெனிசுலா மீதான தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போது, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், “மதுரோ வம்பிழுத்தார், அதன் விளைவை அனுபவித்தார்” என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?