தீவிர வறுமை இல்லாத மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
Nov 03 2025
13
திருவனந்தபுரம்: தீவிர வறுமை இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் வறுமை ஒழிப்பு திட்டம் கடந்த 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 64,006 குடும்பங்கள் தீவிர வறுமையில் வாடுவது தெரியவந்தது. இது மாநில மக்கள் தொகையில் 0.2 சதவீதம் ஆகும். அவர்களை வறுமையில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. நிலமற்ற குடும்பங்களுக்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு திறன்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்காரணமாக 64,006 குடும்பங்களும் தீவிர வறுமையில் இருந்து மீண்டன.
கேரளா உதயமான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், தீவிர வறுமை இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
இதை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம் சாட்டினார். முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று மாலை கேரள உதய தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிலும், தீவிர வறுமை இல்லாத மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக முதல்வர் பினராயி அறிவித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “கேரளா வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாறியிருப்பதால் ஒவ்வொரு மலையாளியின் தலையும் நிமிர்ந்திருக்கிறது. ஏழை குடும்பங்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?