சென்னை, மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி அட்டவணை வெளியீடு
சென்னை, செப்.9-
சென்னை, மதுரையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது.
ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் 14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வருகிற நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்தும், ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனாவும், ‘டி’ பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமிபியாவும், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியாவும், ‘எப்’ பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேசமும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பிடிக்கும் அணிகளில் இரண்டு சிறந்த அணிகள் என 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அட்டவணையை வெளியிட்டார்.
இதன்படி லீக் ஆட்டங்கள் சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப்போட்டி உள்ளிட்ட 41 ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும், 31 ஆட்டங்கள் மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
தொடக்க நாளில் நடைபெறும் 8 ஆட்டங்களில் ஜெர்மனி-–தென்ஆப்பிரிக்கா (காலை 9 மணி), கனடா-–அயர்லாந்து (காலை 11.15 மணி), ஸ்பெயின் – -எகிப்து (பகல் 1.30 மணி), பெல்ஜியம் – -நமிபியா (மாலை 3.45 மணி) அணிகள் மோதும் ஆட்டங்கள் மதுரையிலும், அர்ஜென்டினா –- ஜப்பான் (பகல் 1.15 மணி), நியூசிலாந்து- – சீனா (மாலை 3.30 மணி), இந்தியா – -சிலி (மாலை 5.45 மணி), பாகிஸ்தான்- – சுவிட்சர்லாந்து (இரவு 8 மணி) அணிகள் மோதும் ஆட்டங்கள் சென்னையிலும் நடக்கிறது.
இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னையில் நவ.29-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் டிச.2-ந் தேதி சுவிட்சர்லாந்தை (இரவு 8 மணி) மதுரையில் சந்திக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் தத்தோ தயாப் இக்ரம், ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே, பொதுச்செயலாளர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.