உணவு பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை: கடலூர் கலெக்டர் எச்சரிக்கை
Nov 07 2025
10
கடலூர், நவ. 5–
கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை பார்சல் செய்ய கருப்பு மற்றும் வெள்ளை நிற தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மறுசுழற்சி செய்யமுடியாத, சுற்றுப்புற சூழல் மற்றும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, பிளாஸ்டிக் பொருட்களை வணிகர்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டும் வருகிறது.
அதன் தொடர் நடவடிக்கையாக கடலூர், நெல்லிக்குப்பம், வடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ஜோ.வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 86 உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 9 உணவகங்களிலிருந்து 7.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.12,000 விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உணவு வணிகர்கள் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு உணவு பொருட்களை பார்சல் செய்ய கூடாது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் மீறி தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை உணவகங்களில் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் உணவு பொருள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?