
-பாவலர் கருமலைத்தமிழாழன்
எதற்கின்னும் அழுகையேநீ என்மீ தேறி
எவ்வளவு நேரம்தான் அமர்ந்தி ருப்பாய்
கதறுகின்ற சோகத்தை முகத்தில் தேக்கிக்
கலங்கவைத்துக் கண்களிலே இங்கி ருப்பாய் !
விதவிதமாய் நாளுமொரு துன்பத் தோடு
விரக்தியாக்கி என்செயலை முடக்கு கின்றாய்
வதம்செய்யத் துடிக்காதே வேறு வேலை
வரிசையாக எனக்குளது விலகிச் செல்நீ !
அடுத்தவர்கள் வாழ்வதுபோல் வாழ வேண்டும்
அடுத்தவேளை உண்பதற்கு உழைக் வேண்டும்
படுத்தென்னைக் கவலையிலே மூழ்க வைத்துப்
பார்ப்பவர்கள் இரங்குமாறு வைத்தி டாதே !
விடுத்தென்னை மற்றவர்கள் முன்னே செல்ல
வினையாற்ற முடியாமல் முடக்கி டாதே
வடுவாகக் கண்ணீரை மாற்றி டாமல்
வழிவிடுவாய் புன்னகைதாம் பூப்ப தற்கே !
பழுத்தமரம் பிறருக்குக் கொடுப்ப தைப்போல்
பணமீட்டிப் பிறர்க்குதவி புரிய வேண்டும்
உழுதுநெல்லை விளைவிக்கும் உழவன் போல
ஊர்வாழ பாடுபடச் செல்ல வேண்டும் !
வழுக்களினைச் செய்தேய்க்கும் வல்லோர் தம்மை
வழிமறித்துப் புத்தியினைப் புகட்ட வேண்டும்
அழுகையே எனைவிட்டு நகர்ந்து போபோ
அடுத்தடுத்துக் காத்துளது பணியெ னக்கே !
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?