அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலி 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலி  50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, ஆக.12-


இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை தொடர்ந்து 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


டிரம்பின் இந்த கொடூர வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக ஜவுளி, தோல், ரத்தினங்கள், நகைகள் என பல்வேறு துறைகள் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.


அமெரிக்காவின் இந்த அதிரடிக்கு அடிபணியமாட்டோம் என அறிவித்துள்ள மத்திய அரசு, மறுபுறம் இந்த பாதிப்பை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதில் முக்கியமாக அமெரிக்காவுக்குப் பதிலாக வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறது.


அந்தவகையில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நாடுகள் இந்தியாவின் 90 சதவீத ஏற்றுமதிக்கு பொறுப்பாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


இதில் ஏற்கனவே 20 நாடுகள் மீது மத்திய வர்த்தக அமைச்சகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், மேலும் 30 நாடுகள் இந்த வியூகத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.


இதற்காக ஏற்றுமதி பல்வகைப்படுத்துதல், இறக்குமதி மாற்று மற்றும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை என்ற 4 தூண்களின் அடிப்படையில் வர்த்தக அமைச்சகம் பணியாற்றி வருகிறது.


இந்த அடிப்படையில் விரிவான ஆய்வு நடந்து வருவதாகவும், ஒவ்வொரு தயாரிப்பு அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 35.14 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சம் கோடி) அளவுக்கு தொடர்ந்து தட்டையாகவே இருந்தது.


அந்தவகையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 4 மாதங்களில் இல்லாத அளவாக 18.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது.


அதேநேரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து 112.17 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.9.8 லட்சம் கோடி), இறக்குமதி 4.24 சதவீதம் அதிகரித்து 179.44 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.15.73 லட்சம் கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%