30 நாட்களில் 2.5 கோடி பேரை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்’: மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூலை 17–
‘அடுத்த 30 நாட்களில் 2.5 கோடி பேரை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்’ என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்டச் செயலாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி வாயிலாக இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் மண் –மொழி – மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களா சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்கினோம். தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம்; நன்றி!
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கிறது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும். மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள – இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள்
மிகப்பெரிய சொத்து
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கியிருக்க பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவங்களை எதிர்வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் – தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்’.
இவ்வாறு அவர் கூறினார்.