விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார் சிலைகளை வாங்க.. பூஜை செய்ய நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார் சிலைகளை வாங்க.. பூஜை செய்ய நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுவாக விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும்.

ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாளை (27.8.2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இன்று 26.8.2025 பகல் 02.22 மணிக்கு துவங்கி, நாளை 27.8.2025 மாலை 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் நாளை (27.8.2025) விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.


விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு எந்த நாளில், எந்த நேரத்தில் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும், எந்த நேரத்தில் வழிபட வேண்டும், எப்போது விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்? என்பதை பார்ப்போம்.


சிலை வாங்குபவர்கள் இன்று மாலை 04.50 முதல் 05.50 வரை அல்லது மாலை 06.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6 மணி முதல் 07.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம்.


நாளை புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி நாளிலும் சிலைகளை வாங்கலாம். ஆனால், காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை எமகண்டம் இருப்பதால் அந்த நேரத்தை தவிர்த்து, அதற்கு முந்தைய நேரம் அல்லது 9 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்குவதற்கான நல்ல நேரமாக கருதப்படுகிறது.


ஒருவேளை இன்று விநாயகர் சிலை வாங்க முடியவில்லை. நாளைதான் விநாயகர் சிலையை வாங்க போகிறோம் என்பவர்கள் நாளை காலை 6:00 மணி முதல் 7:20 வரை, காலை 09.10 மணி முதல் 10.20 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அந்த நேரத்திற்குள் வழிபடலாம்.


விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார், சாதம், பாயசம், அப்பம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் நாளை பகல் 01.35 முதல் 2 வரையிலான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மாலையிலேயே செய்யும் வழக்கம் உள்ளவர்கள் மாலை 06.10 மணிக்கு மேல் வழிபடலாம்.


பொதுவாக விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். இன்று (ஆகஸ்ட் 26ம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாம் நாளான ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் (ஆகஸ்ட் 27ம் தேதி) விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாவது நாளான ஆகஸ்ட் 29ம் தேதியன்று கரைக்கக்கூடாது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கக் கூடாது. அதனால் ஐந்தாவது நாளில் அதாவது, ஆகஸ்ட் 31ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து எடுத்துச் செல்வது நல்லது.


வீட்டில் விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் தினமும் விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். வீட்டிற்கு அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலை அமைத்திருந்தால், அந்த சிலைகளுடன் வீட்டில் இருக்கும் சிலையையும் கொண்டு போய் கரைப்பதற்காக வைத்து விடலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம். வீட்டிற்கு அருகில் நீர் நிலைகள் எதுவும் இல்லையென்றால், வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கரைக்கலாம். அந்த தண்ணீரை நாம் நடந்து செல்லும் பாதையில் ஊற்றக்கூடாது. கால் படாத இடத்திலோ அல்லது பூந்தொட்டியிலோ ஊற்றுவது நல்லது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%