மத்திய பிரதேசத்தில் சோகம்: அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வில் எலி கடித்த 2-வது குழந்தையும் பலி
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ் என்ற பெயரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படும் இதில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த அந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் கூறும்போது, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்து உள்ளன.
அவை இரண்டும் பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் ஆகும். அவற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது. அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றார்.
இந்த சம்பவங்கள் பற்றி விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.
இந்தநிலையில், மத்திய பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று பலியானது. இதுபற்றி மருத்துவர் அசோக் யாதவ் கூறும்போது, குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை. 1.2 கிலோ எடை கொண்ட, பிறந்து 3 நாளே ஆன அந்த பெண் குழந்தை கடுமையான இருதய பாதிப்புடன் இருந்தது.
அதனுடைய பெற்றோர் அதனை கைவிட்டு விட்டு சென்றுள்ளனர். போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்து விட்டோம் என்றார். மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவத்தில், பணியாளர்கள் 2 பேரை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. பல்வேறு அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஐ.சி.யு.வில் இருந்த 2-வது குழந்தையும் பலியான சோக சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் துணை சூப்பிரெண்டு டாக்டர் ஜிதேந்திரா வர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, செப்டிசீமியா எனப்படும் ரத்தத்தில் பாக்டீரியா கலந்து அதனால், குழந்தை உயிரிழந்து உள்ளது.
அந்த பெண் குழந்தை 1.6 கிலோ எடையுடன் இருந்தது. பல்வேறு உடல் பாதிப்புகளை கொண்டிருந்தது. 7 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்து குழந்தை பிறந்ததும், அதன் நிலைமை மோசமடைந்தது.
அதன் இடது கையின் இரண்டு விரல்களை எலிகள் கடித்துள்ளன. இதனால், லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டன என கூறினார். மற்றொரு பெண் குழந்தை நேற்று உயிரிழந்து இருந்தது. அதற்கு நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழந்தது. அதற்கும் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்தன என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வந்தபோது, எலி கடித்த 2 குழந்தைகளும் பலியான சம்பவம் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.