நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது
Jan 21 2026
10
நாமக்கல், ஜன. –
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வத்துக்கு தொழில்முறை சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்பெறும் வகையில், கலைத் திட்டத்தில் 33 வகையான கருத்து மூலங்களை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
அவர் உருவாக்கிய கருத்து மூலங்கள் நூலாகவும், ஒலி மற்றும் காணொளி வடிவிலும் உரைநடை, கற்பித்தல், பயிற்சி, மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட தனித்தனி பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், தொழில்முறையில் உலக சாதனை சான்றிதழை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் அவருக்கு வழங்கியது.
இதுகுறித்து முதல்வர் மு.செல்வம் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில் கலைத் திட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பள்ளிப் பாடநூல்கள், செயற்பாட்டுப் புத்தகங்கள், உயர்நிலைக் கற்றல் நூல்கள், மதிப்பீட்டிற்கான பயிற்றுவிப்பு நூல்கள், முதியோர் கல்விக்கான கையேடுகள், வளநூல்கள், கற்பித்தல் முறை நூல்கள், மின் பாடப்பொருள் உருவாக்க வழிகாட்டி நூல்கள், ஆசிரியர் பயிற்சிக் கையேடுகள், தனி வரைவு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்து மூலங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கலைத் திட்டக் கருத்து மூலங்கள் உருவாக்கத்தில் நூலாசிரியர், தொகுப்பாசிரியர், உள்ளடக்க மேற்பார்வையாளர், முதன்மைத் தொகுப்பாளர், ஆவணப்படுத்துபவர், கருத்தாக்கங்களை உருவாக்குபவர் மற்றும் கட்டுரையாளர் உள்ளிட்ட பல்வேறு பணிநிலைகளில் செயலாற்றியதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸின் தலைவர் சி.கலைவாணி மற்றும் மேலாண் பொறுப்பாளர் சி.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?