நாடு முழுவதும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை என்ன? - மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் பதில்

நாடு முழுவதும் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை என்ன? - மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் பதில்


 

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உத்தராகண்ட், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை எனத் தெரிவித்தார்.


இது குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: உயர் நீதிமன்றங்களில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 814. அவர்களில் 116 பேர் பெண்கள். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 18 பெண் நீதிபதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள 33 நீதிபதிகளில் ஒரே ஒரு பெண் மட்டுமே உள்ளார்.


2014 ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 96 பேர் அடங்குவர். உச்ச நீதிமன்றத்தில் ஆறு பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் உள்ள தரவுகளின்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 110 நீதிபதிகள் உள்ளனர். இதில் ஏழு பேர் பெண்கள். பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர்.


அதே நேரத்தில் டெல்லி மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தலா 10 பெண் நீதிபதிகள் உள்ளனர். உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் மணிப்பூர் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் எவரும் இல்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் அரசியலமைப்பின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது. அவை எந்தவொரு சாதி அல்லது பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%