news Breaking News
clock

திருநெல்வேலி: ரேஸ் டிரைவிங்கில் ஈடுபட்ட 703 பேர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி: ரேஸ் டிரைவிங்கில் ஈடுபட்ட 703 பேர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின் படி, மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் அதிவேகமாகவும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பைக் ரேஸ் நடத்துவதாக, காவல்துறைக்கு புகார்கள் வரப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கின்றனர் என குறிப்பிடுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.


சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும், சாகசங்கள் செய்யும் வகையிலும் பயணிக்கும் நபர்கள் மீது புகார் கிடைக்கப்பெறும் போது மட்டுமல்லாது, சமூக வலைதளங்களையும் உன்னிப்பாக கவனித்து, அதில் ஏதேனும் சாலை விதிமுறைகள் மீறப்படும் நிகழ்வுகள் நடைபெறும் தகவல் அறியப்படும்போதுகூட தாமதமில்லாமல், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.


பொதுமக்கள் புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத எந்த ஒரு சாலை விதிமுறை மீறல் சம்பவமும் நடைபெறவில்லை. சட்டத்திற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சாலை விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகின்றனர்.


சமீபத்தில் கூட, வள்ளியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பொது மக்களுக்கு இடையூறும் தரும் வகையில் சாலை விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாங்குநேரி அருகே காரில் அபாயகரமான முறையில் பயணம் செய்த நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிகள் பற்றியும் விபத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் மாவட்ட காவல்துறையின் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வரப்படுகிறது.


மேலும் 2025-ம் ஆண்டில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரேஸ் டிரைவிங்கில் ஈடுபட்ட– 703 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டிய (Drunk & Drive) 1,523 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மது அருந்தியதாக 3,778 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிக வேகமாக வாகனத்தில் சென்ற 104 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 10,692 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 2,602 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற சாலை விதி மீறல்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024-ம் ஆண்டில், சாலை விபத்து மரண வழக்குகள் 2023-ம் ஆண்டை விட 14 சதவீதம் குறைந்துள்ளன. இந்த ஆண்டு அதையும் விட, மேலும் 11 சதவீதம் குறைவாக சாலை விபத்து மரண வழக்குகள் பதிவாகியுள்ளன.


பொதுமக்களின் நலன் கருதி, சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் காலதாமதம் இன்றி நிறைவேற்றப்பட்டு வரப்படும் நிலையில், பொதுமக்களிடம் புகார் கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அடிப்படை ஆதாரப்பூர்வமற்ற, உண்மைக்கு புறம்பான பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்று செய்திகளை வெளியிடுவது, காவல்துறையின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. ஆகவே உறுதி செய்யப்படாத ஆதாரபூர்வமற்ற தகவல்களை நாளிதழ்களில் பிரசுரம் செய்து தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செய்திகளை வெளியிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News