குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: வின்சென்ட் கீமருக்கு 2-வது வெற்றி
சென்னை, ஆக. 9–
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் சதுரங்கப் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 மூன்றாவது பதிப்பு, சென்னையில் உள்ள ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.₹1 கோடி ஆகும். மேலும் மதிப்புமிக்க FIDE சர்க்யூட் புள்ளிகளையும் வழங்குகிறது. இந்த புள்ளிகள் 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்கான தகுதி பெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் போட்டி, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டியின் 2-வது நாளான இன்று மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் மோதினார். கார்த்திகேயன் முரளி வெள்ளை காய்களுடனும், அவோண்டர் லியாங் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டரான ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான உலகத் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள விதித் குஜராத்தி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரும் உலக தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள ரே ராப்சனை எதிர்கொண்டார். விதித் குஜராத்தி கருப்பு காய்களுடனும், ரே ராப்சன் வெள்ளை காய்களுடனும் களமிறங்கினார்கள். இந்த ஆட்டத்தில் 54-வது நகர்த்தலின் போது விதித் குஜராத்தியை ரே ராப்சன் தோற்கடித்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள நிஹால் சரின் 60-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
உலக தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்திய கிராண்ட் மாஸ்டரான வி. பிரணவுடன் மோதினார். பிரணவ் வெள்ளை காய்களுடனும், வின்சென்ட் கீமர் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். 46-வது நகர்த்தலின் போது வின்சென்ட் கீமர் வெற்றி பெற்றார். இது அவருக்கு 2-வது வெற்றியாக அமைந்தது.
சேலஞ்சர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் ஜி.பி.ஹர்ஷ்வர்தன், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்யன் சோப்ராவுடன் மோதினார். இதில் ஹர்ஷ்வர்தன் வெள்ளை காய்களுடனும், ஆர்யன் சோப்ரா கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இந்த ஆட்டம் 21-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.இந்திய கிராண்ட் மாஸ்டர்களான திப்தாயன் கோஷ், எம்.பிரனேஷ் மோதிய ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
அதிபன் பாஸ்கரன், ஆர்.வைஷாலி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.