குடிநீர் இணைப்பு... "முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
Mar 05 2026
10
குடிநீர் இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் கோவை மாநகராட்சி டேப் இன்ஸ்பெக்டர் மற்றும் பிளம்பர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு பெற கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதி உதவி ஆணையரால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்
அதனைத் தொடர்ந்து, காந்தி பார்க் வாட்டர் டேங்க் கீழ் செயல்படும் குடிநீர் விநியோக அலுவலகத்தில் பணியாற்றும் டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகியோர் இணைப்பு பணியை மேற்கொள்ள இருந்தனர்.
வீட்டிற்கு குடிநீர் குழாய்கள் பொருத்தி இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக வீட்டு உரிமையாளர் குற்றம்சாட்டினார். முதலில் பணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதால், அவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபுதாஸ் தலைமையில் போலீசார் மறைமுகமாக கண்காணிப்பு மேற்கொண்டனர். வீட்டு உரிமையாளர், ரசாயனப் பொடி தடவிய ரூ.5,000 பணத்தை டேப் இன்ஸ்பெக்டர் மோகனிடம் வழங்கினார். அதை பிளம்பர் ஈஸ்வரனிடம் கொடுக்குமாறு மோகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
பணம் பெற்றுக்கொண்டதும் மறைந்து இருந்த போலீசார் இருவரையும் மடக்கி கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?