டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள எவ்வித ராணுவ பலத்தையும் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: அமெரிக்கப் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் சரியான திசையில் பயணிக்கவில்லை. கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும் அமெரிக்காவால் மட்டுமே முடியும். உலகப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு கிரீன்லாந்து என்ற அந்தப் பனிப்பாறைத் தீவு தேவைப்படுகிறது, நீங்கள் அதனை தர சம்மதித்தால் அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மறுத்தால் அதனை நாங்கள் நினைவில் கொள்வோம். இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கின்றன.
டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவது குறித்து உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஆர்க்டிக் தீவுகளுக்கு அமெரிக்கா அளித்த பாதுகாப்பை மறந்துவிட்டு, டென்மார்க் நன்றியுணர்வின்றி நடந்து கொள்கிறது. உண்மையில் இந்த மிகப்பெரிய பாதுகாப்பற்ற தீவு வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும். அது எங்கள் பிராந்தியம்.
அங்குள்ள கனிம வளங்களை வெட்டியெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்டியுள்ளது. ஆனால் அந்த வளங்களுக்காக மட்டும் நாங்கள் அதைக் கேட்கவில்லை; தேசிய பாதுகாப்பிற்காக அது தேவைப்படுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்கும் எண்ணமில்லை. டென்மார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலமாகவே சுமூக முடிவை எட்ட விரும்புகிறோம். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.
ஐ.நா. திறமையின்மை..: அதிபர் ட்ரம்பின் இரண்டாம் பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவையொட்டி வெள்ளை மாளிகையில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபை ஒரு மகத்தான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது ஒருபோதும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தியதில்லை. அதன் காரணமாகவே, காசா மறுசீரமைப்பிற்காக நாங்கள் தற்போது 'அமைதி வாரியம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். சர்வதேச விவகாரங்களில் ஐ.நா. சபை இன்னும் ஆக்கபூர்வமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டிருந்தால் இத்தகைய புதிய வாரியத்தின் தேவை இருந்திருக்காது என்பதே எனது எண்ணம்.
எனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஓராண்டு காலத்திலேயே எட்டு போர்ச் சூழல்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். இதில், ஒரு போரைத் தடுப்பதற்குக்கூட ஐ.நா. சபை எனக்கு உதவவில்லை. அதற்காக நான் அவர்களைக் குறை கூறவில்லை; உதவிக்காக நான் அவர்களை அணுகவும் இல்லை.
அந்தந்த நாட்டு அதிபர்களையும், பிரதமர்களையும் நேரில் சந்தித்துப் பேசி, சுமூகமான முறையில் பிரச்சினைகளைத் தீர்த்தேன். உண்மையில், நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போரையும் ஐ.நா. சபையே முன்னின்று முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இருப்பினும், ஐ.நா. சபை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் அந்த அமைப்பின் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் வலிமையானது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.