ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் அதிகரிப்பு: ஐ.நா உதவுவதில் சிக்கல் - நடப்பது என்ன?
காபூல்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு அமலுக்கு வந்த சமூக கட்டுப்பாடுகளால் நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது.
ஆப்கன் மக்களில் சுமார் 2.30 கோடி - அதாவது அந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதி - பேர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாக கடந்த 22-ம் தேதி செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு ஒரு கட்டுரை மூலம் தெரிவித்தது.
சர்வதேச நாடுகளின் உதவியுடன் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கி வந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா தற்போது நிறுத்திவிட்டது. இதையடுத்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ள உலக உணவுத் திட்டம், ஆப்கானிஸ்தானில் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் தற்போதைய குளிர்காலத்தில் குளிரோடு பட்டினியையும் எதிர்கொண்டு வருவதாக கடந்த வாரம் எச்சரித்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 லட்சம் கூடி இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
தலிபான்களின் ஆதிக்கம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற ஆப்கன் அகதிகளில் பெரும்பாலானோர் அந்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 71 லட்சம் ஆப்கனியர்கள் நாடு திரும்பி உள்ளனர்.
தள்ளாடும் பொருளாதாரம், தொடர் வறட்சி, இரண்டு மிகப் பெரிய நிலநடுக்கங்கள், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து திரும்பிய மக்கள் ஆகியவற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், உலக உணவு திட்டத்தின் உதவியும் பெருமளவில் குறைந்ததால் மக்களின் நிலை மேலும் மோசடைந்துள்ளது.
பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தாலிபான் அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் ஏராளமான பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?