விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.4.38 கோடி உதவித்தொகை ஸ்டாலின் வழங்கினார்

விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.4.38 கோடி உதவித்தொகை ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக.14–


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதன் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளால் வழங்கப்பட்ட, விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்த 5 அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித் தொகை மற்றும் உயர்கல்வித் தொகையாக 4 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.


தமிழ்நாடு அரசின் 2025–-26–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் தாக்கல் செய்தபோது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினையும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 2 மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும்,


விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரி யில் உயர்கல்வி பயின்றிடும் அவர்களின் குழந்தை களுக்கான உயர்கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வழங்கிட அரசு ஊழியரின் ஊதியக்கணக்கை பராமரித்து வரும் வங்கிகளின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.


அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் தொகை மற்றும் பிற வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்குவதற்காக 19.5.2025 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம், அரசு ஊழியர்கள் மேற்கண்ட ஏழு வங்கிகளில் சம்பளக் கணக்குகளைப் பராமரித்தால், மேற்கூறிய சலுகைகள் இலவசமாக வழங்கப்படும். இச்சலுகைகள் தவிர, அரசு ஊழியர்களுக்கு தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் ஆகியவற்றில் சலுகை வட்டி விகிதங்களை வழங்கவும் வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது வரை, இத்திட்டத்தின் கீழ் 7,31,670 அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கினை மேற்கண்ட ஏழு வங்கிகளில் இணைத்துள்ளனர்.


தமிழ்நாடு அரசிற்கும், 7 வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டப் பிறகு, 5 அரசு ஊழியர்கள் இயற்கையாகவும் மற்றும் எதிர்பாராத விபத்தினாலும் உயிரிழந்துள்ளனர். மறைந்த அந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினரின் நலன் கருதி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளால் வழங்கப்பட்ட விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகையான 4 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%