வாக்குத் திருட்டுக்குக் கண்டனம் : பீகாரில் ராகுல் தலைமையில் ‘‘மோட்டார் பைக்’’ பேரணி
புர்னியா, ஆக 24–
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ‘‘வாக்குரிமைப் பேரணி’’யில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் இந்த மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று 8வது நாளை எட்டியுள்ளது.
இதனிடையே, வாக்குத் திருட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று, ராகுல் காந்தி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
அதன் ஒருபகுதியாக இன்று கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளை சந்தித்து ராகுல் கலந்துரையாடினார். விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வதை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த நடைப்பயணமானது ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.
‘‘ஏழைகளின் வாக்குகளை
திருட அனுமதிக்க மாட்டோம்’’
வாக்குரிமைப் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்பு வாய்ப்புகளையும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மூடிவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிய மோடி அரசு, இப்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
பீகாரில் இது நடக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது.சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நடைப்பயணமானது ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.