சென்னை:
நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் நேற்று (ஜூலை 15) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன், வருகிற 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து 6 எம்பிக்கள்: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைத்தது. அதனடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 7 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.