மனிதர்கள் மிருகமாகலாமா ?

மனிதர்கள் மிருகமாகலாமா ?

கவிஞர் இரா .இரவி !


கௌரவக் கொலையில் கௌரவம் இல்லை

கொலைக்குப் பின் காற்றில் பறக்குது கௌரவம் !


உயிரினங்களில் உயர்வானது மனிதஇனம்

உயிர்களைக் கொன்று இழிவானது மனிதஇனம் !


விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாமம்

விலங்காக மனிதன் மாறுவது அவமானம் !


மிருகங்களிடம் மனிதம் உள்ளது காண்கிறோம்

மனிதர்கள் மிருகமாவது உள்ளபடி வெட்கம் !


நாய் பூனைக்கு பால் தந்ததைப் பார்த்தோம்

நாயைவிட மோசமாக மனிதன் மோதுகின்றான் இன்று !


தன் குட்டியைக் காக்க பெரிய விலங்கோடு போராடுகிறது

தன் குட்டி என்றும் பாராமல் வெட்டுகின்றான் மனிதன் !


விலங்குகள் கூட தன் இனத்தைக் கொல்வது இல்லை

மனிதன் தன் குடும்பத்தையே கொல்கின்றான் !


ஆதியில் இல்லையடா இந்த கொடிய சாதி

பாதியில் கற்பித்த மடமையடா சாதி !  


கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் கொலைகள்

குனிவை தலைகுனிவை ஏற்படுத்தும் கொலைகள் !


உலகில் வேறு எங்கும் இல்லை கொடிய சாதி

உன்னத தமிழகத்திற்கு தலைகுனிவு சாதி வெறி !


கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும்

கொன்ற உயிரைத் திரும்பத்தர முடியாது !


விலை மதிப்பில்லா மனித உயிர்கள்

விலை போகலாமா ? சாதி வெறிக்கு !


உண்ணும் உணவை விளைவித்தவன் சாதி தெரியுமா ?

உடுக்கும் ஆடைநெய்தவன் சாதி தெரியுமா ?


விபத்தின் போது ஏற்றப்பட்ட இரத்தம் என்ன சாதி தெரியுமா ?  

வீம்புகளை விடுத்து மனிதம்பேணி மனிதனாக வாழுங்கள் !


பலசாதி உழைப்பாளிகளின் பங்களிப்பே உன் வாழ்க்கை

பெரியசாதி சின்னசாதி என்பதில் உண்மை இல்லை !


விலங்கிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு பகுத்தறிவு

விலங்குவெறி விடுத்து பயன்படுத்திடு பகுத்தறிவு !


உழைப்பவன் தாழ்ந்தவன் அல்ல உயர்ந்தவன்

உழைக்காதவன் தான் தாழ்ந்தவன் உணருங்கள் !


தீண்டாமை பாவச்செயல் உரைத்தார் காந்தியடிகள்

தமிழகத்தில் தீண்டாமை அழிந்து மனிதம்மலரட்டும்


சாதி வெறியால் சாதித்து என்ன ? சிந்திப்பீர்

சாதிவெறியால் செத்த உயிர்கள் போதும் ! சிந்திப்பீர்


ஆணவக்கொலை இனி வேண்டாம் மனிதனே

ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%