மது விற்பதில் மட்டுமே தி.மு.க. அரசு சாதனை’’: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மது விற்பதில் மட்டுமே தி.மு.க. அரசு சாதனை’’: அன்புமணி ராமதாஸ் கண்டனம்


சென்னை, ஜன.–


‘‘போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பது மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது’’ என்று அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-–


‘‘தமிழ்நாட்டில் பொங்கல், போகிப்பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத தி.மு.க. அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும், மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை அல்ல, வேதனை. போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10% அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19% அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை படைக்கிறது. கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாட்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடியையும் இந்த மாதத்திலேயே திரும்பவும் வசூலித்து விட இலக்கு நிர்ணயித்து திமுக அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான் எழுகிறது. பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும் போது 19% ஆகும். திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9% மதுக்கடைகளை மூடிய திமுக அரசு, 19% கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது.


மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை, மதுப் பெருக்கத்தை நோக்கித் தான் பயணிக்கிறது என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%