news Breaking News
clock

பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தல்

பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தல்

சென்னை, செப்.23–


அரசின் மானியங்கள் முறையாக வழங்கப்படும் போது, அதற்கு இணையாக வங்கிகளும் கடன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். அரசு துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு திட்டம் வெற்றியடையும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கி, கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்பு திட்டங்களில் கிராமப்புறங்களில் சுயவேலைவாய்பை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களான பிரதமந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் சென்னை கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.


ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:–


கிராமப்புற மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், கிராமப் புறங்களில் தொழிற்சாலைகளை கொண்டு வரவும், இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளில். 15,023 தொழில்முனைவோர்களுக்கு ரூ.326.74 கோடி மானியத்துடன் ரூ.854.53கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதுபோல், அனைத்து கைவினை கலைஞர்களையும் உள்ளடக்கிய, கைவினை கலைஞர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தவும், கலைகளை அழியாமல் பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் குறுந்தொழில்களை தொடங்கவும் செயல்படுத்தப்பட்ட கலைஞர் கைவினை திட்டத்தில் இதுவரை 4,950 நபர்களுக்கு ரூ17.71 கோடி மானியத்துடன் ரூ.83.66 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.


இந்த 2 திட்டங்களும் கிராமப்புற பொருளாதரம் மற்றும் வேலைவாய்பை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிகசிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டங்களில் கடந்த 6 மாதங்களில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் உதவி வழங்குவது தொய்வு ஏற்பட்டுள்ளது.


சிபில் ஸ்கோர்


பார்க்கத் தேவையில்லை


சிபில் ஸ்கோர் இல்லை என்று பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. முதல் முறை கடன் பெறுபவர்களுக்கு சிபில் ஸ்கோர் பார்க்கத் தேவை இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனை வங்கி மேலாளர்கள் நடைமுறைபடுத்த வேண்டும். சிபில் ஸ்கோர் சிறிது குறைவாக இருந்தாலும், எதற்காக அது குறைந்துள்ளது என்பதை பார்த்து கருணை அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.


பயனாளிகள் அளிக்கவேண்டிய ஆவணங்கள் சரியாக இல்லை என்றாலோ, பயனாளி தொழில் தொடங்க விருப்பம் இல்லை என்று தெரிவித்தாலோ, விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு பதிலாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. வங்கிகள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாமல் பெண்களுக்கு உதவிடும் வகையில், கிராமபுற பொருளாதாரத்தினை உயர்த்திட விரைந்து கடன் உதவிகளை வழங்க வேண்டும், இந்த மூன்று திட்டங்களும் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை சார்ந்து உள்ளதால், வங்கி உயர் அலுவலர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.


கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், தொழில் வணிகத் துறை ஆணையர் நிர்மல்ராஜ், தேசிய -தனியார் வங்கிகளின் தலைமை செயல் அலுவலர்கள், பொது மேலாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News