news Breaking News
clock

பஞ்சாப் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 3–ந்தேதி வரை விடுமுறை

பஞ்சாப் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 3–ந்தேதி வரை விடுமுறை

அமிர்தசரஸ், செப்.1–


பஞ்சாபில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 3ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ள பாதிப்பு குறித்து கவர்னர், முதல்வரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.


பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஞ்சாப் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது. மேலும் வெள்ளத்தால் குருதாஸ்பூர், பதான்கோட், பாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், பெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாபில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு மழை பெய்துள்ளது என்று தெரிவித்தனர். இதனிடையே பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எழுதிய கடிதத்தில், பஞ்சாப் கடந்த பல தசாப்தங்களில் கண்ட மிக மோசமான வெள்ள பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. இந்த வெள்ளம் சுமார் 1,000 கிராமங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் என்று அதிகாரிகள் கூறினர்.


அப்போது வெள்ள நிலையை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இருவருக்கும் அவர் உறுதியளித்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


இந்த நிலையில் கனமழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு 3ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 27 முதல் 30 வரை அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த விடுமுறையானது அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் என 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News