நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி:
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல்துறை மீது புகார்: இதுகுறித்து வழக்கறிஞர் செல்வம் கூறும்போது, “முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்யலாம். ஆனால், காவல் துறை அவர்களைக் கைது செய்ய மறுக்கிறது. அவர்களைக் கைது செய்தால் மட்டுமே, உடலை வாங்கி அடக்கம் செய்வோம்” என்றார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுர்ஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கவின் செல்வகணேஷ் கொலை தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவின் செல்வகணேஷும், சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்துள்ளனர். இது தொடர்பான பிரச்சினையில் கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.