news Breaking News
clock

நிரம்பும் மருத்துவமனைகள், அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நிரம்பும் மருத்துவமனைகள், அதிகரிக்கும் உயிரிழப்புகள்



தெக்ரான், ஜன. 


ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் நேரடி தாக்கம் மருத்துவமனைகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.


தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகள், உயிரிழந்தும் கடுமையாக காயமடைந்தும் வரும் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிகின்றன. பிபிசியிடம் பேசிய மூன்று மருத்துவமனைகளின் பணியாளர்கள் தெரிவித்த தகவல்கள், நிலைமையின் தீவிரத்தை வெளிச்சம் போடுகின்றன.


தெக்ரானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவ ஊழியர், “இளைஞர்களின் தலை மற்றும் இதயப் பகுதிகளில் நேரடியாக சுடப்பட்ட குண்டு காயங்கள் அதிகம்” எனக் கூறியுள்ளார். இது கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தாண்டி, உயிரைப் பறிக்கும் ராணுவ நடவடிக்கைகளாக மாறிவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டும் சூழலை உறுதி செய்கிறது. தலைநகரில் உள்ள ஒரு கண் மருத்துவமனை கூட ‘நெருக்கடி நிலை’ அறிவித்திருப்பது நினைவூட்டத்தக்கது.


பிபிசியிடம் பேசிய மருத்துவர்களில் இருவர், நேரடி குண்டுகள் (live ammunition) மற்றும் பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளனர். இது, போராட்டக்காரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகள் எவ்வளவு கடுமையாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.


சர்வதேச அரசியல் மோதல்:


இந்த உள்நாட்டு நெருக்கடியுடன் இணைந்து, சர்வதேச அரசியல் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை, போராட்டக்காரர்களைக் கொல்வது “ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என அமெரிக்கா மீண்டும் எச்சரித்தது. அதற்கு பதிலளித்த இரான், அமைதியான போராட்டங்களை “வன்முறையான சீர்குலைவு நடவடிக்கைகளாக” மாற்றியதற்கு அமெரிக்காவே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. இதன் மூலம், போராட்டங்கள் இனி வெறும் உள்நாட்டு பிரச்னை அல்ல; அது சர்வதேச அரசியல் மோதலின் ஒரு பகுதியாக மாறிவருவதை உணர முடிகிறது.


சமீபத்திய முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்குகிறது; அதற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தோன்றினாலும், ஈரான் அரசின் பார்வையில் அது வெளிநாட்டு தலையீட்டின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.


இந்த போராட்டங்களின் பின்னணி முழுக்க பொருளாதார சிக்கல்களே. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அரசு செலவுக் கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெஹ்ரானில் தொடங்கிய போராட்டங்கள், தற்போது ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு பரவியுள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிபிசி பெர்சியன் சேவை, ஆறு குழந்தைகள் உட்பட 26 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது.


மருத்துவமனைகளில் நிரம்பும் படுக்கைகள்,அதிகரிக்கும் உயிரிழப்புகள், அரசியல் குற்றச்சாட்டுகள், சர்வதேச எச்சரிக்கைகள்—இவை அனைத்தும் ஈரான் இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது என்பதைக் காட்டுகின்றன. பொருளாதார கோரிக்கைகளாகத் தொடங்கிய மக்கள் எழுச்சி, இனி அரசியல் மாற்றத்துக்கான போராட்டமாக மாறுமா, அல்லது கடுமையான ஒடுக்குமுறையால் அடக்கப்படுமா என்பதே உலகம் முழுவதும் கவனிக்கும் கேள்வியாக மாறியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News