news Breaking News
clock

நாட்டுக்காக ஏழு மணி நேரம்: ஷைபாலி வர்மா நெகிழ்ச்சி

நாட்டுக்காக ஏழு மணி நேரம்: ஷைபாலி வர்மா நெகிழ்ச்சி


 


சண்டிகர்: ''பைனலில் ஏழு மணி நேரம் நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்து, உலக கோப்பை வென்றோம்,'' என ஷைபாலி வர்மா தெரிவித்தார்.


நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இதில் பிரதிகா ராவல், காயம் அடைய, இளம் ஷைபாலி வர்மாவுக்கு 21, வாய்ப்பு தேடி வந்தது. பைனலில் அசத்திய ஷைபாலி, 87 ரன், 2 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார். ஆட்டநாயகி விருதையும் தட்டிச் சென்றார்.


சமீபத்தில் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஷைபாலி, சொந்த ஊரான ரோஹ்தக் (ஹரியானா) திரும்பினார். இங்கு திறந்த காரில் பவனி வந்த இவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பின் ஷைபாலி கூறியது: பெண்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு போராடினால், எதிர்பார்க்கும் பலன் தானாகவே கிடைக்கும். கடந்த ஒரு ஆண்டு எனக்கு கடினமாக இருந்தது. நிறைய சிரமங்களை சந்தித்தேன். ஆனாலும் கடின உழைப்பை விடவில்லை. எனது முயற்சிக்கு கடவுள் உரிய பலன் அளித்தார். அரையிறுதிக்கு முன் தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அணிக்கு உலக கோப்பை வென்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.


கோப்பை முக்கியம்: பைனலின் போது ஆரம்பத்தில் பதட்டமாக உணர்ந்தேன். பின் மனதை அமைதிப்படுத்தி ஆட்ட வியூகத்தில் கவனம் செலுத்தினேன். எனது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், 'ஆல்-ரவுண்டராக' பிரகாசிக்க முடிந்தது. போட்டி நடந்த ஏழு மணி நேரம் நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே சிந்தனையாக இருந்தது. சதத்தை நழுவவிட்டதில் எனக்கு வருத்தம் இல்லை. கோப்பை வெல்வதே முக்கியமானதாக இருந்தது. 'உலகை' வென்ற தருணம் மறக்க முடியாதது.


கிரிக்கெட்டில் எனது 'ரோல் மாடல்' சச்சின் தான். பிரதமர் மோடி எங்களுடன் இரண்டு மணி நேரம் செலவிட்டு, தேவையான ஊக்கம் அளித்தார்.


உலக கோப்பை பைனலில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா தாகூர் அசத்தினார். இவருக்கு 3 வயது இருக்கும் போது தந்தை கேகர் சிங் தாகூர் இறந்து விட்டார். தாயார் சுனிதா தனிநபராக போராடி வளர்த்துள்ளார்.


ரேணுகா கூறுகையில்,''எனது வெற்றியில் தாயாருக்கு முக்கிய பங்கு உண்டு. சொந்த ஊரான ரோஹ்ரு (இமாச்சல்) திரும்பியதும் ஹட்கோடி கோயிலுக்கு சென்றேன். ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். உலக கோப்பை தொடரில் வரிசையாக 3 போட்டிகளில் தோற்ற போது அதிக நெருக்கடி ஏற்பட்டது.


ஆனாலும் உலக கோப்பை வெல்வோம் என்பதில் நம்பிக்கையாக இருந்தோம். எனது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி அனைத்து வீராங்கனைகளின் வாழ்க்கை பயணம் பற்றி அறிந்து வைத்திருந்தார். எங்களது வெற்றிநடையை தொடர்வதே அடுத்த இலக்கு,''என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News