திருச்சி ஆவின் வளாகத்தில் புதிய ஐஸ்கிரீம், பால் உபபொருட்கள் தொழிற்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி, ஜன.
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பால் பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் 10,000 லிட்டர் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்தத் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்தத் தொழிற்சாலையில் கப், கோன் மற்றும் கேண்டி போன்ற ஐஸ்கிரீம் வகைகளும், நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்களான தயிர், மோர் மற்றும் லெஸ்ஸி போன்றவைகளும் நவீன முறையில் தயாரிக்கப்பட உள்ளன. இவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்கள் திருச்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்குத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.
தடையின்றி கிடைக்க ஏற்பாடு:
மேலும் திருச்சி ஒன்றியத்தின் அருகில் உள்ள பிற மாவட்ட ஆவின் ஒன்றியங்களின் தேவைக்கேற்பவும் இங்கிருந்து பொருட்களை வழங்கிப் பயன்பெறும் வகையில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. நுகர்வோருக்குத் தரமான புதிய ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றிச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த நவீன ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவின் தயாரிப்புகள் அதிக அளவில் பொதுமக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கொட்டப்பட்டில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், பி.ஜெயநிர்மலா, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் சி.முத்துமாரி, பண்ணை பொது மேலாளர் ஆர்.சதீஷ், பால்வளத் துணைப்பதிவாளர்கள் கோ.நாகராஜ் சிவக்குமார் (திருச்சி), ஜெ.விஜயா (பெரம்பலூர்), ஆர்.நாராயணசாமி (அரியலூர்) உள்ளிட்ட ஆவின் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?