news Breaking News
clock

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்' - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்' - ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்


 

சென்னை,


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


அந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் மற்றொரு வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த தீபக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.


முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரி பாக்கியை பொறுத்தவரை முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பிறகு 13 கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், சரியான தொகையை தெரிவித்தால் அந்த தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து வரி பாக்கி குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு உத்தரவின்படி வருமான வரி பாக்கி குறித்து வருமான வரித்துறை தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து வருமான வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “2026 ஜனவரி 31-ந்தேதி வரை வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடி வருமான வரி பாக்கி உள்ளது. ஜெயலலிதாவின் வாரிசான தீபக் தவணை முறையில் ரூ.1.12 கோடியை செலுத்தியுள்ளார்.


வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News