ஹனோய், பெய்ஜிங், ஜூலை 23-
சீனா - வியட்நாம் நாடுகளின் ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக சீன ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளும் முதல் முறையாக இந்த கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளன. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, மேலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைக்கும் என பாராட்டப்படுகிறது. இரு நாடுகளும் நீண்டகாலமாகவே நிலம் மற்றும் கடல் எல்லைப்பகுதியில் கூட்டாக ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கூட்டு ராணுவப் பயிற்சி என்பது இதுவே முதல் முறையாகும். சீன ராணுவ அமைச்சக அறிக்கையின் படி, இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது வியட்நாமுடனான சீனாவின் எல்லை பகுதியான குவாங்சி ஜுவாங் என்ற தன்னாட்சிப் பகுதியில் இம்மாதம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே தென் சீன கடல் பகுதியில் உரிமை உள்ளிட்ட எல்லை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் போதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்மைக்காலமாக சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தகப் போர் துவங்கிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. வியட்நாமின் உற்பத்தித் துறைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ஒரு முக்கிய நாடாக பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் போர் தீவிரமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, “அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட” ஆசியாவில் உள்ள சீனாவின் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாமிற்கு அரசுமுறை பயணம் சென்றார். அப்போது நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜிய உறவின் 75 ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக ஏப்ரல் 30 அன்று வட வியட்நாம், தென் வியட்நாம் ஒன்றிணைந்த 50 ஆம் ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் சீனாவின் ராணுவமும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.