
நமது இரவுகள் நீளமானவை. அவற்றை நெடுந்தூக்கத்தில் சுருக்க வேண்டாம். நமது பகல்கள் தூய்மையானவை. அவற்றை நம் பாவங்களால் அசுத்தப் படுத்த வேண்டாம். வாழ்வில் நாம் போகிற வழி சாக்கடையாய் அமைந்து விட்டாலும், சேருகிற இடம் கோயிலாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வீரிய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் நம் செயல்கள் நமது சொற்களைப் பிரதிபலிக்க வேண்டும். ஒன்று சொன்னாலும் "நச்"சென்று சொல்ல வேண்டும். அது மந்திரச் சொல்லாக ஒலிக்க வேண்டும். நம் சொல்லை உலகம் உன்னிப்பாகக் கேட்க வேண்டும். போரில்லா உலகம் காண விழைவது, "No War" மந்திரம் ஒலிப்பது, பேரன்பு வெளிச்சம் பரப்புவது போன்ற நமது சொல்லும், செயலும் மானுட சமூகத்திற்கு நன்மை பயக்கும் அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும்.
நமது சொல், செயல் ஒவ்வொன்றும் அர்ச்சுனன் அம்பு போன்று இருக்க வேண்டும். எடுக்கும் போது ஒன்று. தொடுக்கிறபோது நூறு. படுகிறபோது ஆயிரம். நமது சொல்லும், செயலும் நம் எதிர் நிற்பவனை நம்முடன் இணைத்துக் கொள்ளும்படி அமைய வேண்டும். உலகின் எந்த மூலையில் போர் வெடித்தாலும், இங்கே நமக்கு வலிக்க வேண்டும். அதற்கு நாம் சத்ரியனாக இருக்கத் தேவை இல்லை. சாணக்யனாக இருக்க வேண்டும். நாம் "தீ" என்று எழுதினால் பேப்பர் பொசுங்குகிற வாடை வரவேண்டும். அதுதான் சொல்லிலும், செயலிலும் நமக்கு சரஸ்வதி கடாட்சம். கனவுகள் மெய்ப்பட வாழ வேண்டும். அதுதான் சரியான, வீரியமான வாழ்க்கை.
ஒருவன் பிறக்கும் போது அவனுக்கு மூச்சு இருக்கிறது. ஆனால் பெயர் இல்லை. அவன் இறந்த பிறகு பெயர் (சடலம்) இருக்கிறது. ஆனால் மூச்சு இல்லை. அவ்வாறு மூச்சுக்கும், பெயருக்கும் இடையே உள்ள இடைவெளி தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது எவரும் பதில் காண முடியாத கேள்வி. மரணம் என்பது எவரும் எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத பதில். எனவே பதில் நம்மை எட்டும் வரை, கேள்வியை ரசிப்போம். புலம்பல்களைத் தவிர்ப்போம். நமது இருப்பை அர்த்தமுள்ளதாக ஆக்கி, மண் பயனுற வாழ்வோம். வாழ்க்கை வாழ்வதற்கே.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?