சாத்’ பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Oct 31 2025
26
பாட்னா, அக். 30–
பீகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் சாத் பூஜையை அவமதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பீகாரில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்மரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அவர் பேசியதாவது:–
காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் சாத் பூஜை விழாவை அவமதிப்பதோடு, அதை ஒரு நாடகம் என்று அழைக்கிறார்கள்.
பீகார் மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். அவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். சாத் பூஜை உலகம் முழுவதும் பிரபலமானது. சாத் பூஜைக்குப் பிறகு பீகாரில் நான் மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த விழா பக்திக்காக மட்டுமல்ல, சமத்துவத்துக்காவும் நடக்கிறது. இந்த விழாவிற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அடையாளத்தைப் பெற அரசு முயற்சித்து வருகின்றது என்றார்.
ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவை தான் பீகாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் அடையாளங்கள். ஆர்ஜேடி–காங்கிரஸ் உறவு தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றது. பீகாரைக் கொள்ளையடிக்க, எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்ஜேடி–காங்கிரஸ் ஒன்றிணைந்தது. அவர்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்தது.
பீகாரின் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒருபோதும் பீகாரை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்து வளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. அதே நேரத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவர்களால் பீகார் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தேர்தல் கூட்டங்களில், பிரதமர் சாத் பூஜையின்போது டெல்லி யமுனையில் நீராடத் திட்டமிட்டதன் மூலம் நாடகத்தை நிகழ்த்த முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?