news Breaking News
clock

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு - தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் ஜாமீனில் விடுவிப்பு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு - தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் ஜாமீனில் விடுவிப்பு


 

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் என்.வாசு புதன்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.


கேரள இடதுசாரி அரசின் உயா்நிலைத் தலைவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவராக கருதப்படும் இவா், இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 5-ஆவது நபராவாா்.


சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்க கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது குறித்து கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இரு வழக்குகளைப் பதிவு செய்து, காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டு வருகிறது.


தங்கக் கவசம் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரிகள் பி.முராரி பாபு, எஸ்.ஸ்ரீகுமாா், முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா், புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி உள்பட 12 போ் அடுத்தடுத்து கைதாகினா்.


தாங்கள் கைதான 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, பி.முராரி பாபு, ஸ்ரீகுமாா், சுதீஷ் குமாா், உண்ணிகிருஷ்ணன் போற்றி ஆகியோா் ஜாமீன் பெற்றனா்.


இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது நபரான என்.வாசுக்கு கொல்லம் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.


கேரளத்தில் அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சபரிமலை வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி என்.வாசு கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News