கொடைக்கானலில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய விவகாரம்: அதிகாரிகள் இடைநீக்கம்

கொடைக்கானலில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய விவகாரம்: அதிகாரிகள் இடைநீக்கம்



கொடைக்கானல், 


கொடைக்கானல் வனப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இது குறித்து மாவட்ட வன முதன்மைப் பாதுகாவலர் முகமது சபாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–


-கொடைக்கானல் மன்னவனூர், பேரிஜம் மற்றும் பூம்பாறை ஆகிய வனப்பகுதிகளில் உள்ள சவுக்கு மற்றும் குங்கிலிய மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டு, அவ்விடத்தில் சோலை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், மன்னவனூர் பகுதியில் வனத்துறை குறிப்பிட்ட அளவை விடக் கூடுதலாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, மன்னவனூர் வனச்சரகர் திருநிறைச்செல்வன், வனவர்கள் சுபாஷ், அம்ச கணபதி மற்றும் வனக் காப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற வனப்பகுதிகளிலும் இத்தகைய விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்துச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுத் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வின் முடிவில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முகமது சபாப் தெரிவித்தார்.


வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் கூறும்போது, கொடைக்கானல் நகர் பகுதிக்குள் வரும் காட்டெருமைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. மேலும் பழனி, பெருமாள்மலை, அருங்கானல் பகுதிகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்கு நடமாட்டம் மற்றும் காட்டுத் தீ குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


பட்டா நிலங்களில் மரம் வெட்ட அனுமதி வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க, அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் விரைவில் 'டிஜிட்டல் முறை' அறிமுகப்படுத்தப்படும். கன்னிவாடி வனச்சரகத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மின்வேலி அமைக்கும் பணிகளும், பாதிக்கப்பட் டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%