news Breaking News
clock

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா

இந்த பயணத்தின் மொத்த வரைபடம் இதுவாகும். கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இந்த வழிகளில் பயணித்தால் அதிக நேரம் எடுக்கலாம். முழுக்க முழுக்க சுற்றுலா அம்சங்களோடு இந்த பயணம் அமையும். வாருங்கள் செல்லலாம்.

 

கன்னியாகுமரி


அரபிக்கடல், வங்கக்கடல்,இந்துமாக்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடமான குமரியில் பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட எண்ணற்ற இடங்கள் இருக்கின்றன. சுற்றுலாவின் தொடக்கமாக கன்னியாகுமரியிலிருந்து நான்கு வழிச்சாலை வழியாக சென்று கன்னியாகுமரி - திருச்செந்தூர் சாலை வழித்தடத்தில் செல்லவேண்டும்.


 கன்னியாகுமரி - திருச்செந்தூர் 


ஏறக்குறைய 91 கிமீ தூரம் கொண்ட சாலைகள் வழியே செல்லும்போது இடையில் கூடங்குளம்,ஆற்றங்கரை பள்ளிவாசல், உவரி சுயம்பு லிங்கசுவாமி கோயில், உவரி கப்பல்மாதா கோயில், மணப்பாடு ஹோலிகிராஸ் சர்ச், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், புனித அந்தோணி ஆலயம், ஸ்ரீ சாஸ்தா கோயில், திருச்செந்தூர் கடற்கரை, திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் உள்ளன.


 திருச்செந்தூர்


திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

 

திருச்செந்தூர் - தூத்துக்குடி


திருச்செந்தூரிலிருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது தூத்துக்குடி. முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் தளத்துக்கு பிரபலமான இடம் தூத்துக்குடி. இந்த வழியில் புனித தாமஸ் ஆலயம், மாரிமுத்தம்மன் கோயில், அதிசய ஆரோக்ய அன்னை ஆலயம், காயல்பட்டினம், காயல்பட்டினம் கழிமுகம், தாமிரபரணி ஆறு, பழையகாயல், பொன்னாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல பார்ப்பதற்குரிய இடங்கள் உள்ளன.


தூத்துக்குடி 


கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை. தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை தன்னகத்தே கொண்டுள்ளது . மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம், கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை


 தூத்துக்குடி - ராமேஸ்வரம்


தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட தூரம் 189 கிமீ ஆகும். தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையே நிறைய தீவுகள் உள்ளன. வான் தீவு, கசுவாரி தீவு, விலாங்கு தீவு, காரைத் தீவு,

உப்புத் தண்ணி தீவு, நல்லத்தண்ணி தீவு, புழுகுனி தீவு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும். வேம்பார் அய்யனார் கோயில், முத்தாரம்மன் கோயில், மொகைதீன் ஜும்மா மஸ்ஜீத், கற்பக விநாயகர் கோயில், மாடசாமி கோயில் என எண்ணற்ற புனித தலங்களும் இவ்வழியில் அமைந்துள்ளன. மேல் - கீழ் செல்வனூர் எனும் ஊர்களில் பறவைகள் சரணாலயமும் உள்ளது. சிக்கல் ஏரி, உத்தரகோசமங்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து பயணித்தால் இராமேஸ்வரத்தை அடைந்துவிடலாம்.

ராமேஸ்வரம்


இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கான மதமுக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில், 24 கோவில் தீர்த்தங்கள், கோதண்டராமர் கோவில், ஆதாம் பாலம் அல்லது ராம் சேது மற்றும் நம்பு நாயகி அம்மன் கோவில் ஆகியவை அவற்றில் சிலவாகும்.


ராமேஸ்வரம் - வேளாங்கன்னி


ராமேஸ்வரம் - வேளாங்கன்னி வழித்தடம் மொத்தம் 255கிமீ தூரம் கொண்டது. தேவிப்பட்டினம், நவபாஷனம், திரு ஏழுமலலர் அரசர் முனீஸ்வரர் கோயில்,சின்னப்பள்ளி, திருப்பாலக்குடி, ரானபத்ரகாளியம்மன் கோயில், முல்லிமுனை, கரைக்காடு முதலிய சுற்றுலாப் பிரதேசங்கள் உள்ளன.


வேளாங்கன்னி


வேளாங்கன்னியில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. குறிப்பாக வேளாங்கன்னி பேராலயம், பக்தர்களின் காணிக்கை அருங்காட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங்கன்னி கடற்கரை போன்றவை காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவருபவைகளாக உள்ளன. அன்னையின் நீரூற்று, புனித ஸ்நானம் மற்றும் அன்னையின் நீரூற்று ஆலயம் ஆகியவை சுற்றலா பயணிகளுக்கு பரவசத்தை ஏற்படுத்தும்.


வேளாங்கன்னி - சிதம்பரம் 


வேளாங்கன்னியிலிருந்து சிதம்பரம் 95கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இடையில் நாகப்பட்டினம், காரைக்கால், பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் ஆறு முதலிய இடங்கள் உள்ளன. வாஞ்சூர் எனும் இடத்தில் தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு சாலை மாறுவதால் அங்கு சோதனைச்சாவடி உள்ளது. பின் சந்திரப்பாடி அருகே மீண்டும் தமிழ்நாட்டை சாலை அடைகிறது. பின்னர் உப்பனாறு, டேனிஸ் கோட்டை போன்ற சுற்றுலாத் தளங்களை காணலாம். கருகுடி தில்லை காலையம்மன் கோயில், அண்ணன் கோயில் போன்றவை உள்ளன.


 சிதம்பரம்


சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம். இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது. காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் பயணிகள் இந்த ஏரியை பார்த்து ரசிக்கலாம். இவை தவிர, சிதம்பரம் நகரில் ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தங்கப்பூச்சு நகைத்தயாரிப்பில் இந்நகரம் பாரம்பரியமாக புகழ் பெற்று அறியப்படுகிறது. சந்தடியற்ற நகரம் என்பதால் கோடைக்காலத்திலும் கூட சிதம்பரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலப்பருவம் கோயிற்பகுதியை நன்றாக பார்த்து ரசிக்க உகந்ததாக இருக்கும்.


சிதம்பரம் - புதுச்சேரி

 

63 கிமீ பயணத்தில் நாம் சிதம்பரத்திலிருந்து புதுச்சேரியை அடையலாம். பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், வெல்லாறு போன்ற இயற்கை சுற்றுலாத்தளங்களும் இந்த பாதையில் உள்ளன. கடலூர், வெள்ளிக்கடற்கரை, குட்டி ஆண்டவர் கோயில், கொடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, கண்ணியம்மன்கோயில், சுண்ணாம்பாறு தாண்டி புதுச்சேரியை அடையலாம்.


புதுச்சேரி - சென்னை


புதுச்சேரியிலிருந்து மகாபலிபுரம் வழியாக சென்னையை அடைவது மிகவும் ஆர்ப்பரிக்கும் பயணமாகும். நீங்கள் இருசக்கரவாகனத்தில் உலா வருவதற்கு விரும்பினால் இது மிகச்சிறந்த பாதையாக அமையும்.


 பாண்டிச்சேரி

 உதய நகரம் என்று அழைக்கப்படும் ஆரோவில் நகரம், சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்தன்மையான கலாச்சாரம், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலைகளால் ஈர்க்கிறது. காந்தி சிலை, மாத்ரிமந்திர், பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம், ஜோசம் பிரான்கோயிஸ் டூப்ளிக்ஸ் சிலை, கௌபர்ட் அவென்யூவில் உள்ள பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்-ன் சிலை ஆகிய பல்வேறு கலைநினைவுச் சின்னங்களையும், சிலைகளையும் பாண்டிச்சேரியில் பொலிவு குறையாமல் இன்றும் காண முடியும். பாண்டிச்சேரி அருங்காட்சியகம், ஜவஹர் பொம்மை காட்சியகம், தாவரவியல் பூங்கா, உட்சேரி நீர் நிலப்பகுதி, பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் தேசிய பூங்கா, அரிக்கமேடு, டூப்ளிக்ஸ் சிலை மற்றும் ராஜ் நிவாஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் பிற பார்வையிடங்களாகும்.


சென்னை 


 கனவுகளை சுமந்தபடி வேர்களிடமும் உறவுகளிடமும் சொல்லிவிட்டோ, சொல்லாமலோ புறப்பட்டு ரயிலிலும், பஸ்ஸிலும், லாரியிலும் பயணித்து வந்திறங்கிய எண்ணற்ற வேட்கை மனங்களின் கனவுகளை தாமதமாகவேனும் நிறைவேற்றி வைத்த அதிசய நகரம் இது. சென்னை என்பது பலருக்கு நகரம் அல்ல - அது கனவுகளின் கருத்துருவம், வெற்றிக்கான ஆடுகளம், வாழ்க்கைக்கான பிடிமானம், சுதந்திரத்தை அளித்திட்ட ஒரு புகலிடம் - இப்படித்தான் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வோடு, உணர்வோடு கலந்து வீற்றிருக்கிறது இந்த மெட்ராஸ் அல்லது சென்னை நகரம்.  


புதிய நூற்றாண்டு மற்றும் புத்தாயிரத்தின் துவக்கத்திலிருந்து (2000) இன்னும் பிரம்மாண்டமாக தன் எல்லைகளை நாள்தோறும் விரித்தபடி பல துறைகளிலும் தடம் பதித்து நிற்கும் நவீன நகரமாக இது ஒளிர்கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News