கணவன் கண் முன்னே... பூங்காவில் முறிந்து விழுந்த மரம்; மகளை காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாய்
Aug 18 2025
12

லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் லங்காஷைர் பகுதியில் பிளாக்பர்ன் நகரில் விட்டன் கன்ட்ரி என்ற பெயரிலான பூங்காவுக்கு பலரும் வருகை தருவது வழக்கம். இதன்படி, தங்களுடைய 9 வயது மகன் மற்றும் 5 வயது மகள் ஆகியோரை அழைத்து கொண்டு வாசிம் கான், அவருடைய மனைவி மடியா கவுசர் (வயது 32) ஆகியோர் சென்றனர்.
வாசிம் கான், பூங்காவில் மகனுடன் கால்பந்து விளையாடி பொழுது போக்கினார். அப்போது, வேறு திசையில் பந்து ஓடி சென்றது. இதனால், அதனை எடுக்க மகனுடன் கான் சென்றார்.
கவுசர், மகளை மடியில் வைத்தபடி இருந்துள்ளார். அப்போது, திடீரென மரம் ஒன்று முறிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கவுசர் உஷாராவதற்குள் மரம் மேலே விழுந்து விட்டது. கடைசி நேரத்தில் மகளை தூர தள்ளி விட்டு, காப்பாற்றினார். எனினும், அவர் மரத்திற்கு கீழே சிக்கி கொண்டார்.
இதனை பார்த்ததும் வாசிம் கான் ஓடி வந்துள்ளார். மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்த மனைவியை காப்பாற்ற நீண்டநேரம் போராடினார். எனினும், அதில் பலனின்றி கவுசர் பலியானார்.
இதுபற்றி வாசிம் கான் கூறும்போது, மரம் திடீரென முறிந்து விழும் சத்தம் கேட்டது. காற்று கூட அப்போது வீசவில்லை. வேறு எதுவும் நடக்கவில்லை. நான் ஓடிச்சென்று அவளை காப்பாற்ற முயன்றேன். அப்போது அவள் உயிருடனேயே காணப்பட்டாள் என்றார்.
அவள், மிக அழகான மற்றும் உண்மையானவள். அவள் மீது குழந்தைகள் உள்பட பலரும் அன்பு செலுத்தினர். ஸ்னாப்சாட்டில் மரத்தின் புகைப்படம் ஒன்றையே கடைசியாக வெளியிட்டார். பூங்காவை விட்டு செல்ல தயாராக இருந்தபோது அதனை படம் பிடித்தாள் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, அந்த பூங்காவில் இருந்த மரங்களின் கிளைகள் முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டன. கவுசரின் இறுதி சடங்கு கடந்த புதன்கிழமை மதியம் நடந்தது. லண்டன், பிர்மிங்ஹாம், பிராட்போர்டு உள்பட இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பலர் வந்து கவுசரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?