ஊராட்சித் துறை சார்பில் ரூ.104 கோடியில் மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஆக 22–
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து, 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 104.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம், 66 புதிய பள்ளிக் கட்டடங்கள், 4 புதிய நூலகக் கட்டடங்கள், 49 பொது விநியோகக் கடைகள், 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள்,
45 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், 16 கிராம செயலகக் கட்டடங்கள், 84 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 3 சமூகநலக் கூடங்கள், மதுக்கூரில் நேரடி நெல் விற்பனை மையக் கட்டடம், 3 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், 2 மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் மற்றும் 2 பாலங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தற்போதுவரை 348 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 290 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி ஒன்றியம், 3 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சி மாவட்டம் - தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் 3 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;
மதுரை மாவட்டம் – கொட்டாம்பட்டி, அரியலூர் மாவட்டம் – உட்கோட்டை, தருமபுரி மாவட்டம் – மாதேமங்கலம், வேலூர் மாவட்டம் – வளத்தூர், கடலூர் மாவட்டம் – அன்னவல்லி ஆகிய 11 மாவட்டங்களில் 5 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 49 பொது விநியோகக் கடைகள்;
என மொத்தம் 104 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்களை முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.