news Breaking News
clock

ஆறு படையப்பனின் ஆசி

ஆறு படையப்பனின் ஆசி




துறையூரின் அந்தப் பரபரப்பான மாலை நேரத்தில், தன் காரில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார் வெற்றிச்செல்வன். பேருந்து நிலையத்தைக் கடந்தபோது, இடதுபுறம் கம்பீரமாக நின்ற அந்தத் திரையரங்கம் அவர் கவனத்தை ஈர்த்தது. அது 'அஜந்தா தியேட்டர்'. அதன் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய போஸ்டர், அவர் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தியது.

அங்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் அந்தப் பழைய ‘படையப்பா’ திரைப்படத்தின் போஸ்டர் மின்னியது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் படம் திரையிடப்பட்டிருந்தது.

வெற்றிச்செல்வனுக்குள் பழைய நினைவுகள் அலைமோதின. 1999-ம் ஆண்டு... இதே துறையூர் அஜந்தா தியேட்டரில், தன் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு வரிசையில் நின்று டிக்கெட் எடுத்த அந்த நாள் நேற்று நடந்தது போல இருந்தது. அவருக்குத் தெரிந்து தன் தாயோடும், குடும்பத்தோடும் பார்த்த கடைசித் திரைப்படம் அதுதான். அன்று தியேட்டரில் இருந்த கொண்டாட்டமும், அம்மாவின் சிரிப்பும் அவருக்கு இன்னும் பசுமையாக நினைவிருந்தது.

ஆனால், விதி அத்தனை சீக்கிரம் அவருக்கு ஓய்வு தரவில்லை. 2000-ம் ஆண்டில் அவரது உலகம் இருண்டு போனது. உயிராய் நேசித்த தாய் அவரை விட்டுப் பிரிந்தார். அடுத்தடுத்து வந்த சோதனைகளால், செல்வாக்காக வாழ்ந்த குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தத் திரைப்படத்தில் வருவது போலவே, சொத்துக்களை இழந்து ஒரு சிறிய குடிசைக்கு அவர் மாற வேண்டியிருந்தது.

அந்தக் கடினமான காலங்களில், வெற்றிச்செல்வனுக்குள் ஊக்கத்தை விதைத்தது இந்தப் படையப்பாவின் கதைதான். "விதி உன்னைச் சோதிக்கலாம், ஆனால் உன் உழைப்பு உன்னைக் கைவிடாது" என்பதை அந்தப் படம் அவருக்குச் சொல்லிக் கொண்டே இருந்தது. உழைப்பால் உயர்ந்த அந்தத் திரைப் பிம்பம் போல, வெற்றிச்செல்வனும் தன் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி, இழந்தவற்றை மீட்க ஓடிக்கொண்டே இருந்தார்.

இன்று, பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்று அதே 'துறையூர் அஜந்தா' தியேட்டரில், ஏசி கேபினில் தன் மனைவி மற்றும் மகளோடு அமர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார். திரையில் படையப்பா குடிசைக்குள் நுழையும் காட்சியில், வெற்றிச்செல்வன் அறியாமலேயே அவர் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் சரிந்தது. அது சோகத்தின் கண்ணீர் அல்ல; தான் கடந்து வந்த கரடுமுரடான பாதையின் சாட்சி.

தன் மகளின் பிஞ்சு விரல்களைப் பற்றிக்கொண்டபோது, அவர் இழந்த வாழ்க்கையைத் தன் உழைப்பால் மீண்டும் ஈட்டிவிட்ட நிம்மதி அவரிடம் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இதே தியேட்டரில் ஒரு மகனாக அமர்ந்திருந்தவர், இன்று ஒரு தந்தை என்ற பெருமையோடு அமர்ந்திருந்தார்.

படம் முடிந்து வெளியே வந்தபோது, இரவு நேரக் காற்று சில்லென்று வீசியது. அஜந்தா தியேட்டரின் போஸ்டரைப் பார்த்தவாறே ஒரு மெல்லிய புன்னகை புரிந்தார் வெற்றிச்செல்வன்.

காலம் பலவற்றைத் தன்னிடம் இருந்து எடுத்திருந்தாலும், மீண்டும் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தன் கைகளில் கொடுத்திருப்பதையும் ஆறு படையப்பனின் ஆசியையும் அவர் உணர்ந்தார்


ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News