இந்தியாவின் குஜராத்தில் உள்ள சபர்மதி நதியின் கரையோரம் அமைந்திருக்கும் நகரமே அஹமதாபாத் தாகும். அஹமதாபாத் மிகவும் அழகான மற்றும் வண்ணமயமான நகரமாகும். குஜராத்தில் உள்ள பெரும் நகரங்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அஹமதாபாத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களை பற்றி பார்ப்போம்.
1. சபர்மதி ஆறு (Sabarmathi riverfront)
சபர்மதி ஆறு அஹமதாபாத்தை இரண்டாக பிளந்து கொண்டு நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது. அஹமதாபாத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இதனுடைய முன் பகுதியை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு தயார் படுத்தியுள்ளார்கள். நடைபாதை 11.4 கிலோ மீட்டர் அமைத்துள்ளனர். மிதிவண்டி ஓட்டுவதற்கும், படகு சவாரி செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளனர். மாலை வேளையில் சபர்மதி ஆற்றின் அழகை ரசித்துக்கொண்டே ஒரு நடைப்பயணம் சென்று வரலாம். இங்கு செல்வதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை.
2. தாதா ஹரிணி வாவ் (Dada hari ni vav)
இது அஹமதாபாத்தில் உள்ள மிகவும் பழமையான கிணறாகும். இதை கட்டியது சுல்தான் முகமது பேகடா ஆவார். இந்த கிணறு ஏழு அடுக்குகளை கொண்டது. இதில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் மிகவும் அழகிய கலைநயம் கொண்டதாகும். இது இந்து முஸ்லிம் கட்டிடக்கலைக்கு சரியான சான்று என்று கூறுகிறார்கள். நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கே வர உகந்த மாதங்களாகும். இங்கே சுற்றி பார்க்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
3. ஸ்டேச்சு ஆப் யுனிட்டி (Statue of unity)
சர்தார் வல்லபாய்படேலுக்காக அஹமதாபாத்தில் கட்டப்பட்டது தான் ஸ்டேச்சு ஆப் யுனைட்டியாகும். இது உலகிலேயே மிக உயர்ந்த சிலையாகும். இது ஐந்து பாகங்களாக பிரிக்கபட்டுள்ளது. அதில் மூன்று மட்டுமே மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதில் தோட்டம், மியூசியம், சர்தார் வல்லபாய் அணை ஆகியவை அடங்கும். இச்சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கே செல்வதற்கு உகந்த மாதங்களாகும். இங்கே செல்வதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 120 ரூபாயும், குழந்தைகளுக்கு 60 ரூபாயும், 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகும்.
4. சுவாமி நாராயணன் கோவில் (Swami narayanan temple)
அஹமதாபாத்தில் மிகவும் புகழ்பெற்ற இடமாக சுவாமி நாராயணன் கோவில் இருக்கிறது. இக்கோவிலை அக்ஷார்தாம் கோவில் என்றும் அழைப்பார்கள். இதனுடைய கட்டுமானம் அழகான வண்ணமயமான தோற்றம் சுற்றுலாப்பயணிகளை இங்கே அதிகம் ஈர்க்கிறது. இங்கு செல்வதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப் படுவதில்லை. கோவிலிலே சென்று தரிசனம் செய்து விட்டு பின்பு சச்சிதாநந்தம் லைட் ஷோவைக் காணலாம்.
5. சபர்மதி ஆசிரமம் (Shabarmathi ashramam)
அஹமதாபாத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம்தான் சபர்மதி ஆசிரமமாகும். இங்கிருந்து தான் மஹாத்மா காந்தியால் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்டது. சபர்மதி ஆற்றின் ஓரத்திலிருக்கும் இவ்விடத்தில் காந்தி எப்படி வாழ்ந்தார் என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இவ்விடத்தை சுற்றி பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
6. ராணி கே வாவ் (Rani ki vav)
ராணி கே வாவ் சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள 900 வருட பழமையான படிக்கிணறாகும். இதன் அமைப்பு மற்ற பழமையான கிணறுகளை போலவே அமைந்துள்ளது. எனினும் இக்கிணறு அதன் அழகிய வேலைப்பாட்டிற்கும், கட்டுமானத்திற்கும் பெயர் போனதாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களின் பட்டியலில் ஒன்றாக இருக்கிறது.
அஹமதாபாத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகவும், அதிக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் திகழ்கிறது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் இவ்விடத்திற்கு வர உகந்த மாதங்களாகும். இந்தியர்களுக்கு 15 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதன் அருகிலிருக்கும் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலையும் பார்த்துவிட்டு செல்லலாம்.
7. ஜமாமசூதி (Jama Masjid)
ஹம்மது ஷா உருவாக்கிய பல கட்டிடக்கலைகளில் ஜமாமசூதியும் ஒன்றாகும். இந்த மசூதி 1423 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் தங்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை செய்வதற்காக கட்டப்பட்டதாகும். இது பத்ரா கோட்டைக்கு அருகிலே உள்ளது. ஜமாமசூதியில் அழகிய வேலைப்பாடுகளை கொண்ட 260 தூண்கள் கவனிக்கபட வேண்டியவையாகும்.இங்கே வருவதற்கு உகந்த மாதம் அக்டோபர் முதல் மார்ச் ஆகும். இங்கே எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
8. கன்காரியா ஏரி (Kankaria lake)
கன்காரியா ஏரியே அஹமதாபாத்தில் உள்ள பெரிய ஏரியாகும். இந்த ஏரியை 15ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஏரியில் தானாகவே சுத்திகரித்துக்கொள்ளும் வாட்டர் ப்யூரிபையர் உள்ளது. இப்போது இந்த இடம் சுற்றுலாப்பயணிகளுக்கு பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் இடம், பூங்கா, உணவு கடைகள் போன்றவை இருக்கிறது. இவ்விடத்தை சுற்றி பார்க்க உகந்த மாதம் அக்டோபர் முதல் மார்ச் ஆகும். பெரியவர்களுக்கு 25 ரூபாயும் குழந்தைகளுக்கு 10 ரூபாயும் ஜாகிங் செய்வோருக்கு இலவசமாகவும் இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் போது, இங்கேயிருக்கும் இசை நீரூற்றை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அஹமதாபாத்தில் சுற்றி பார்க்க பல இடங்கள் இருப்பினும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் முத்தான 8 இடங்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். அஹமதாபாத் செல்லும்போது மறக்காமல் இவ்விடங்களை பார்த்து ரசித்து விட்டு வாருங்கள்.