================
இந்தியா மேலும் இரண்டாம் நிலைத் தடைகளைப் பார்க்கப் போகிறது என்ற அடாவடி அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அதற்கு எதிர்வினையாக இந்திய நலனில் சமரசமில்லை, தனிப்பட்ட முறையில் விலை கொடுக்கவும் தயார் என்று திரு. மோடி பதிலடி கொடுத்துள்ளார். கருத்தியல் மோதல்களையும், கட்சிகளின் பேதங்களையும் புறந்தள்ளி சவாலுக்கு முகம் கொடுத்துள்ள பிரதமர் அனைத்து மக்களின் தலைவராக உயர்கிறார்.
ஒரு அற்பப் பொருளான டிஷ்யூ தாளில் இவ்வளவு ஆபத்து பொதிந்துள்ளதா? டிஷ்யூ பேப்பர் என்பது மெலமின்,பாலிமின், யூரியா, பார்மல்டிஹைட் எபிக்ளோரோ ஹைட்ரின் போன்ற ரசாயனங்கள் இணைந்த ஆபத்து என்ற கட்டுரை சரியான விழிப்புணர்வு எச்சரிக்கை.
சிறுநீரை அடக்கக் கூடாது என்ற கட்டுரை அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல். 20 மி. மீ. அளவு கொண்ட கற்களையும் ஹோமியோபதி சிகிச்சையில் கரைத்து விட முடியும் என்பது நல்ல வழிகாட்டல். இ இதழுக்கு நன்றி.
தென் மாவட்டங்கள் தொழில் வேகம் பெற்று வரும் தற்கால சூழ்நிலையில் புதிய ரயில் சேவைகளைக் கோரும் எம். பி. நவாஸ்கனின் முயற்சி அவசியம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று.
திருமதி. பிரேம லதா தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 50 சதவீதம் மதிப்பெண் கொடுத்துள்ளார். எப்படியோ அதுவும் பாஸ் மார்க் தானே என்று முதல்வர் திருப்தி பட்டுக் கொள்ளலாம்.
சிவ. முத்து லட்சுமணன் அவர்கள் எழுதிய காரைக்கால் அம்மையாரின் சரிதம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும் ஆசிரியரின் சிக்கன நடை அழகும், சீரான தமிழ் உரையும், ஆங்காங்கே விரைவியுள்ள செய்யுள் சுவையும் அருமையான படைப்பாகப் பரிணாமம் பெற்றுள்ளது. பாராட்டுக்கள். தமிழிசைத் தலைவி போன்ற இவ்வகை ஆளுமைகள் பலரின் கதையை உங்களின் தமிழழகில் எதிர்பார்க்கிறேன் சார்.
"காதலுக்கு மரியாதை கூட்டு" - இது திரு. நெல்லை குரலோன் அவர்களின் அழகு தமிழ்க் கவிதையா, அமுதச்சுவைக் கட்டுரையா. விடைகாண இயலவில்லை. இது நெல்லைக் குரலின் செண்டை மேளம். அடுக்கு மொழியின் கதகளி. இது......
காதல் கோட்டையின்
கவின்மிகு முகப்பு.
கற்பனைத் தோரணக்
கனித்தமிழ் தொகுப்பு.
வாரணம் ஆயிரம்
வரிசையின் அணிவகுப்பு.
"தட்டிக் கேட்டுத்
தடை தந்தார்க்கும்
தாயன்பு காட்டி உன்
தரத்தைக் கூட்டு" என
விவிலிய கால
சாலமன் போல
இளைஞற்கு அளிக்கும்
இன்னுரை வியப்பு. இவர் என்னவர் என்பதில்
எத்தனைக் களிப்பு!
பாராட்டுக்கள் சார்.
திருமிகு. நடேஷ் கன்னா அவர்களின் பத்து மணிமொழிகளும் பரவச நிறைவே. அவற்றுள் "நாம் முதல் முதலில் அழுத நாளைத்தான் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறோம். கண்ணீர் முடிவல்ல தொடக்கம்" என்ற இரண்டு வரிகள் மகுடமாய் மின்னுகின்றன. சபாஷ் சார்.
திருமிகும் இ இதழ் சொந்தங்கள் பலரின் படைப்புகள் அருமையாகவே உள்ளன. கொதிக்கும் எரிமலையே கூட உறைந்து போகும் அளவுக்கு காதல் மேகத்தை பனி மழை யாகப் பொழிய வைப்பதில் சாதித்துக் காட்டுகிறார் திரு. முத்து ஆனந்த். வாழ்த்துக்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றிகள்.
P. கணபதி
பாளையங்கோட்டை.