news Breaking News
clock

பார்வை...

பார்வை...

""

 (ஒரு பக்கக் கதை)


பேருந்து நிறுத்தத்தில் கூட்டம். புழுதி,

வெயில், வியர்வை, ஆரவாரக் குரல்கள்.


வீராயி, தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


அப்போது ஒரு இளைஞன்… கண்கள் நிலைக்காமல், அவளைத் தப்பான இடத்தில், தப்பான பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.


அவளுக்குப் புரிந்தது. பால் கொடுப்பதை நிறுத்தி விட்டு எழுந்து நடந்தாள்


“என்னடா பாக்குற?” குரல் கூர்மையாக, முகம் உறுதியாக.


அந்த இளைஞன் கண்கள் தாழ்ந்தன.

கூட்டம் அவனைக் கேவலமாய்ப் பார்த்தது. அவன் நகர்ந்தான்.


கோவிலில்,


அந்தப் பெரியவர் குழந்தைக்கு மொட்டை அடிக்கத் தொடங்கியதும் அது அழத் தொடங்கியது.

அழுகை உச்சஸ்தாயிக்குப் போனது.

வீராயிக்குத் தயங்கவில்லை.


பெரியவருக்கு நெருக்கமாய் அமர்ந்து,

குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பித்தாள்.


பெரியவர் பார்வையில் காமமில்லை. பாசம் மட்டும் இருந்தது ஒரு தாத்தா பார்ப்பது போல.


மொட்டை முடிந்ததும் அவள் கணவன் மருது மெதுவாகக் கேட்டான்,

“பஸ் ஸ்டாண்டுல.. அந்த இளைஞன்…?”


வீராயி சொன்னாள்:

“பஸ்ஸ்டாண்டுல பார்த்தவனோட கண்ணுல ஆசை... காமம் ரெண்டும் கலந்திருந்தது... இந்தப் பெரியவரோட கண்ணுல பாசம் மட்டும்தான் இருந்தது.”


மருது விழிக்க, அவளே சொன்னாள்,

“பொம்பளைக்கு இருக்கிற தனி சக்தி என்னன்னா... ஆம்பளையோட பார்வையிலேயே அவன் மனசுக்குள்ள என்ன எண்ணங்கள் ஓடுதுன்னு

கண்டுபிடிக்கிற சக்தி.”


பேருந்து வந்தது. அவர்கள் ஏறினார்கள்.


(முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News