இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட அமைதி வாரியம் தொடங்கினார் ட்ரம்ப்
டாவோஸ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம்’ (போர்டு ஆஃப் பீஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார்.
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: ‘போர்டு ஆஃப் பீஸ்’ அமைப்பில் இணைய அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். வருங்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கே இது சவாலாக விளங்கும். இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் பல இந்த அமைப்பில் சேர மறுப்புத் தெரிவித்துள்ளன.
காசா முனையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல, உலகுக்கானது. காசாவில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற உலகப் பிரச்சினைகளுக்கும் இந்த அமைப்பை விரிவாக்கம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
50 நாடுகள் கையெழுத்து: அசர்பைஜான் முதல் பராகுவே வரை சுமார் 59 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், அங்கு கூடியிருந்த தலைவர்களை நோக்கி, “நீங்கள் உலகிலேயே அதிகாரம் மிக்கவர்கள்; எனது நண்பர்கள்” என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைய மறுத்துவிட்டன.
முடிவெடுக்காத இந்தியா.. இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
அமைதி வாரிய தொடக்க நிகழ்வில் அமெரிக்க வெளிஉறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதி அரேபியா, அர்ஜென்டினா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, நேற்று இரவு நடைபெற்ற தலைமைச் செயல் அதிகாரிகளுக்கான வரவேற்பு மற்றும் இரவு விருந்து நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசும்போது, ‘‘என்னால் நம்பவே முடியவில்லை. வழக்கமாக அவர்கள், என்னை ஒரு பயங்கரமான சர்வாதிகாரி போன்றவர் என்பார்கள்.
நான் சர்வாதிகாரிதான். ஆனால் சில நேரங்களில் ஒரு சர்வாதிகாரி தேவைப்படுகிறார். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் என்னை அப்படி கூறவில்லை” என்றார். டாவோஸில் இருந்து புறப்படும் முன்பு ட்ரம்ப் கூறியபோது, ‘‘நான் இங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினேன். விரைவில் புதினையும் சந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை போர் முடிவுக்கு வரவேண்டும்’’ என்றார்.