ஷியாமளா கல்லூரியிலிருந்து வரும்போது சற்று உற்சாகமாக, கையில் ஸ்வீட் பாக்ஸூடன் வந்தாள்.. அவள் ஆசைப்படி தான் படித்த கல்லூரியிலியே விரிவுரையாளராக சேர்வது எத்தனை சந்தோஷமானது..
தன் வீட்டுக்கதவு திறந்தவள், சோஃபாவில் நான்கு வயதிருக்கும் ஒரு சின்ன பையனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.. யாரது என்று யோசித்துக்கொண்டே..
" யார் இந்த குட்டி கெஸ்ட்.. இந்தா ஸ்வீட் எடுத்துக்க ", என்று கூறியவளை எந்த உணர்ச்சியுமின்றி பார்த்துவிட்டு திரும்பி அவன் பாட்டுக்கு டிவி பார்க்க.. இவளே ஒரு ஸ்வீட்டை எடுத்து அவன் கையில் கொடுக்க.. மெல்ல சாப்பிட ஆரம்பித்தான்..
உள்ளே சென்று தன் அம்மாக்கு ஸ்வீட் கொடுத்தாள்.
"அட..வந்துட்டியா? முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது ?",என்று விசாரித்தவருக்கு..உற்சாகம் பீரிட அனுபவத்தை சொல்லிவிட்டு, அந்த பையனை பற்றி கேட்டாள்..
" நம்ம மாடி வீட்டுக்கு குடி வந்திருக்காங்க.அந்த ஹவுஸ் ஓனர் எனக்கு ஃபோன் பண்ணி ..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கனு சொல்ல, காலையில அவங்க பால் காச்சினப்ப போனேன்.
வயசான அம்மா.அவங்க ஒரே பையன்.அவரும் உன்னையமாதிரி காலேஜ் லெக்சரர்தான்.இந்த குட்டி பேரன் யஷ்வந்த்.பாவம் இந்த பிள்ளையோட அம்மா..கோவிலுக்கு அவங்க அம்மா அப்பாவோட கார்ல போனப்போ ஆக்ஸிடென்ட்ல, இவனைத்தவிர எல்லோரும் செத்து போயிட்டாங்களாம்..
அவங்க சாவ பக்கத்துல இருந்து பாத்ததனால அந்த அதிர்ச்சில இப்படி அமைதியா ஆகிட்டானாம்.யாரிடமும் பேசவே மாட்டானாம்..வீடு மாத்தி பாருங்கன்னு டாக்டர் சொன்னதால சொந்த வீட்டை விட்டுட்டு இப்ப வாடகைக்கு வந்திருக்காங்க..அந்தம்மா இப்பதான் இவனை இங்க விட்டுட்டு பால் வாங்க போயிருக்காங்க..இப்ப வந்திடுவாங்க..!"
ஷியாமளாக்கு ரொம்ப பாவமாக இருத்தது.இவனை கொஞ்சம் இறுக்கம் தளர்த்த நினைத்தவள்..ரூமுக்குள் போய் முகத்தில் பௌடர் அப்பி பெரிய பொட்டு வைத்து ,வெள்ளை ஷாலால் மூடிக்கொண்டு .. ரூமிக்குள்ளிருந்து வந்து பயங்காட்டினாள்.. பற்களை இளித்து கண்களை உருட்ட..
அவன் எந்த சலனமும் இன்றி இவளை பார்த்தான்.. பிறகு மெல்ல எழுந்து இவளருகே வர..
அவளும் குனிந்து பேய். சேஷ்டை செய்ய..சட்டென்று இவளை அப்படியே கழுத்தோடு கட்டிக்கொண்டான்,அம்மா ! அம்மா! என்ற முனகலோடு.
கிச்சனுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த ஷியாமளியின் அம்மா,
" ஏன்டி..ஆரம்பிச்சிட்டியா உன் நாடகத்தை.பிள்ளைகளை பயமுறுத்தி பாக்குறதுல என்ன சந்தோஷமோ..?
என்று சொன்னவரிடம் .."இவன் எங்க பயந்தான்.வந்து என்னை கட்டிக்கிட்டு கொஞ்சறான்.."
" டேய்..பயமாயில்லையாடா உனக்கு?..கொஞ்சுற!..", என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் தோளில் சாய்ந்து கொள்ள..அவன் பாட்டி வருவதற்கும் சரியாக இருந்தது..
உள்ளே வந்தவர் சற்று ஆச்சர்யமாய் இவளை பார்த்தார்..
"வாங்க!..சும்மா..இவன்ட்ட விளையாண்டேன்", ஷியாமளா அவரை அழைத்துக்கொண்டே, அவனை அப்படியே தூக்கிக்கொண்டாள்..அங்கிருந்த துணியால் தன் முகத்தையும் துடைத்துக்கொண்டாள்..
இதை பாத்துட்டேயிருந்தவன் மீண்டும் முத்தமிட்டு புன்னகைத்தான்.
"பரவால்லியே..என் பேரனை சிரிக்க வெச்சிட்டியே..அடிக்கடி வீட்டுக்கு வா.!", என்று பேரனை கைப்பிடித்து அழைத்தார்.அவனோ இவள் தோள்களைக்கட்டிக்கொண்டு இறங்க மறுத்தான்..
"யஷ்வந்த்..வா..அப்பா வந்துடுவாங்க.நம்ம வீட்டுக்கு போலாம்..", என்று அழுத்தி சொல்ல, மனமில்லாமல் இவளுக்கு திரும்பி திரும்பி டாட்டா காண்பித்தபடி சென்றான்..
மறுநாளும் இவள் காலேஜிலிருந்து வரும் சமயம், அவன் இவள் வீட்டிலிருக்க, உள்ளே நுழைந்தவளை வந்து கட்டிக்கொண்டான்..
இவளுக்கும் அவன் மேல் தாயில்லாப்பிள்ளை என்ற பரிதாபம் இருக்க..
அவனிடம் பேச்சுக்கொடுத்தாள்..
வாய்க்கு வாய்..அம்மா , அம்மா என்று இவளை அழைத்து பேசியது இவளை நெகிழ்த்தியது..
இப்போ..அவன் பாட்டி சொன்னார்..
" ஸ்கூல்ல இவன் கூட படிச்ச ஒரு பையன் ,இவன்ட்ட "உங்க அம்மா செத்து பேயா ஆகிட்டாங்கடா", என்று சொல்லியிருக்கான்.பிள்ளைக்கு அது மனசுல பதிஞ்சிருக்கு.நீ நேத்து பேய் வேஷம் போடவும் ..அவன் கண்ணுக்கு நீ அம்மாவா தெரியிற போல.."
ஷியாமாவும் அவள் அம்மாவும் , ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"நேத்து டாக்டர் ரிவ்யூ டேட். இவன்கிட்ட பேசிட்டு, அவர் சொன்னது இது..
ஆனா வயசுப்பொண்ண..இப்படி இவன் அம்மா அம்மானு கூப்புடுறது எனக்கு கஷ்டமாதான் இருக்கு..நீங்க தப்பா நெனச்சிக்காதீங்க..!"
" அது கிடக்கு மா.இவளுக்கும் ரொம்ப இளகுன மனசுதான்..பரவால்லமா..இப்படி பழச மறந்து பிள்ளை நல்லானா போதும்.."ஷியாமளா அம்மா சொல்ல கொஞ்சம் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தது அவர் முகத்தில்..
இரண்டு வாரங்கள் சென்ற நிலையில்..காலேஜ் கேண்டீனுக்கு செல்ல ..அங்கு வெளியே வந்த சக லெக்சர் தியாகு,இவளுக்கு பாடம் எடுத்தவர்..இவளை பார்த்ததும்..
,"என்ன? ஸ்டூடன்டா இருந்தப்போதான் கிளாஸ் கட்டடிச்சிட்டு கேண்டின் வருவ..பழைய பழக்கம் மறக்கலியா?", என்று புன்னகைக்க..
" இல்லை ,லைட்டா தலைவலி", என்று சமாளித்து பதிலலித்தாள் ஷியாமளா..
அவருடன்,ஜென்டில் லுக்கில் இருந்த இன்னொருவர் ,இவளை பார்த்து புன்னகைத்தார்..
இவளிடம்..
" உங்களுக்கு தேங்கஸ் சொல்ல நானே நேரில் வரனும்னு நினைச்சேன்..என் பையன் யஷ்வந்தை பழைய நினைவுகளில் இருந்து மீட்ட உங்களுக்கு நன்றி சொல்ல நினைச்சேன்.தேங்க்ஸ்!", என்றவனை சற்று விழி விரித்து பார்த்தாள்..
"யஷ்வந் அப்பா நீங்கதானா"
"யெஸ் ..ஐ ஆம். விக்ரம்..என் அம்மா ஒரு நாள் உங்களை பார்க்'ல காமிச்சாங்க..நீங்க பார்க்கலை.உங்க லெக்சரர் தியாகு, எனக்கு சீனியர் ..ஆனா ஃப்ரெண்ட்ஸ்",என்று சொல்ல
" சரியான வாலு இந்த பொண்ணு..இவளா நீ சொன்ன அந்த கேரிங் கேர்ள் ..ஆச்சர்யம்தான்..",என்றுசொன்ன தன் லெக்சரரிடம் ..
" ஏன் சார் நான் நாட்டி'னாலும், தெளிவா முடிவெடுக்குற ஆளுதான?", என்று கேட்க..
" எஸ்.ஐ அக்ரீ வித் யூ", அவர் பதிலளிக்க..
"உங்க பையன் கண்ணுக்கு அம்மாவா தெரியற நான் ,ஏன் அவன் அம்மாவா ஆகக்கூடாது..?அந்த சின்ன பிள்ளை மனசை மீண்டும் உடைக்க நான் விரும்பல..அப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கிறதா நேற்று சென்னதிலிருந்து, இந்த எண்ணத்தை ரொம்ப தீவிரமா யோசிச்சிதான் தலைவலியே வந்தது..நீங்களும் யோசிச்சிட்டு எங்க அப்பாக்கிட்ட பேசுங்க..ஹோப் ..யூ வில் சே எஸ்..", விக்ரமின் கண்களை பார்த்து இவள் பேச,
" சாரி! ..சாரி!..எனக்கு என் மனைவிய தவிர வேற இன்ட்ரஸ்ட் இல்லங்க.நீங்க இதை நெனச்சி குழப்பிக்காதீங்க.யூ கேரி ஆன் வித் யுவர் பெர்சனல் லைஃப்.." , விக்ரம் சொல்ல..முகம் சிறுத்த ஷியாமளா..முகத்தை தொங்க போட்டவாறு கேண்டீனுக்குள் நுழைந்து கொண்டாள்..
லெக்சரர் தியாகு இப்ப விக்ரம் தோளில் கைப்போட்டு நடக்க ஆரம்பித்தார்..
" ஹேய் மேன்..இன்னும் எத்தனை காலம், கடந்து போனதை பத்தி மட்டும் நெனச்சிட்டிருப்ப?..போனமுறை உங்க அம்மா கூட எனக்கிட்டஇது குறித்து வருத்தப்பட்டாங்க..இந்த பொண்ணு உன்கிட்ட நேரா பட்டுனு கேட்டதுல ,எந்த தப்பும் எனக்கு தெரியல.உன் பையனும் அவ கூட ஈசியா அடாப்ட் ஆகிடுவான்..ஆக்ச்யுவலா..ஏற்கனே அடாப்ட் ஆகிட்டான்..",..அவர் சொன்னது விக்ரம் மூளைக்கு போனதான்னுதான் தெரியலை..
கைகுலுக்கிட்டு..
" நான் யோசிக்கிறேன் ..பை மை ஃப்ரெண்ட்", என்று கிளம்பிவிட்டான்..
அன்று மாலையே இது குறித்து தன் தாயிடம் பேச..முதலில் கோபப்பட்டவள்..இவள் முகத்தில் இருந்த தெளிவில் அவரும் தெளிந்தார்..
"நாடகக்காரி..உனக்கு பேசி புரியவைக்க தெரியாதா?..உன் அப்பாக்கும் புரிய வெச்சா சந்தோஷம்..ஆனா, மாப்பிள்ளைக்கே ஆர்வம் இல்லனா என்னடி பன்றது?" என்று கேட்க ,ஷியாமளா முகத்துல பல்ப் எரிந்தது..
இவள் அப்பாக்கிட்ட பொறுமையா பேசி புரியவைக்க..அந்த பக்கம் விக்ரமின் அம்மா..உண்ணாவிரதம் முதற்கொண்டு அனைத்து சாத்வீக உபகரணங்களை ஷியாமளா அம்மா உபயத்தில் பயன்படுத்தி அவன் சம்மதத்தை வாங்கி விட்டார்.
நல்ல முகூர்த்தத்தில் ,கோவில்ல வைத்து விக்ரம் தாலிகட்ட..உண்மையாகவே முறையிலும், யஷ்வந்துக்கு தாயானாள் ஷியாமளா..
முற்றும்

தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்