திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பும் முறைகேடு தொடர்பாக, பக்தர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தி விரைவாக தரிசனம் செய்ய வைப்பதற்காக பக்தர்களிடம் அதிக பணம் வசூலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமைச்சர், எம்எல்ஏ, கோயில் தக்கார் ஆகியோரது உதவியாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அந்த குறுஞ்செய்தியைக் கோயிலில் காட்டி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தரிசனத்துக்கு அனுமதிக்கும் விதிமீறல் தொடர்பாக, பக்தர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
முன்பணம் செலுத்தினால்... அதில், அமைச்சர், எம்எல்ஏ, தக்காரின் உதவியாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தினால், பணம் கட்டியவர்களின் செல்போனுக்கு, அவர்கள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைப்பார்கள். இந்த குறுஞ்செய்தியை கோயிலில் காட்டினால், எந்தவித வரிசையிலும் நிற்காமல் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதனால் பொது தரிசன வழியில் வருவோர், முதியோர், ஊனமுற்றோர், 100 ரூபாய் தரிசனத்தில் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக வீடியோவில் அந்த பக்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோயில் வட்டாரத்தில் விசாரித்தபோது, குறுஞ்செய்தி முறை தரிசனம் கடந்த சில ஆண்டு காலமாகவே நடந்து வருகிறது என உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக கோயில் தரப்பில் கேட்டபோது, “முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இந்த குறுஞ்செய்தி முறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் பணம் வசூல் செய்வதாக எந்தப் புகாரும் இல்லை. இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.